ரெயில்வேயில் வேலை கிடைத்து இருப்பதாக குடும்பத்தினரிடம் நாடகமாடிய பெண் தாதர் ரெயில் நிலையத்தில் போலீசில் சிக்கினார்


ரெயில்வேயில் வேலை கிடைத்து இருப்பதாக குடும்பத்தினரிடம் நாடகமாடிய பெண் தாதர் ரெயில் நிலையத்தில் போலீசில் சிக்கினார்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:52 PM GMT (Updated: 21 Jan 2019 11:52 PM GMT)

ரெயில்வேயில் வேலை கிடைத்து இருப்பதாக குடும்பத்தினரிடம் நாடகமாடிய பெண், தாதர் ரெயில் நிலையத்தில் போலீசாரிடம் சிக்கினார்.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் தாதர் ரெயில் நிலையத்தில் சம்பவத்தன்று டிக்கெட் பரிசோதகர் பிரியங்கா குப்தா பணியில் இருந்தார். அப்போது 6-ம் எண் பிளாட்பாரத்தில் வந்து நின்ற பிரகதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்திறங்கிய பயணிகளிடம் அவர் டிக்கெட்டுகளை சோதனை செய்தார்.

இதில், அவர் இளம்பெண் ஒருவரிடம் டிக்கெட்டுகளை காண்பிக்கும்படி கூறினார். அவர் தானும் டிக்கெட் பரிசோதகர் தான் என கூறினார். சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் பணிபுரிவதாக கூறிய அவர் தன்னிடம் இருந்த அடையாள அட்டையையும் காண்பித்தார்.

அந்த அடையாள அட்டை டிக்கெட் பரிசோதகர் விவரங்கள் அச்சிடப்படாமல் கையால் எழுதப்பட்டு இருந்தன.

இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த பிரியங்கா குப்தா அவரை தலைமை டிக்கெட் பரிசோதகர் ஜிஜேந்திர பாட்டீலிடம் அழைத்து சென்றார். அங்கு விசாரணை நடத்தியதில், அந்த பெண் போலி டிக்கெட் பரிசோதகர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் ரெயில்வே போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினார் கள். இதில், அவர் சத்தாராவை சேர்ந்த பூஜா ராவ்டு(வயது23) என்பதும், தற்போது மும்பை நாக்பாடாவில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வருவதும் தெரியவந்தது.

என்ஜினீயரிங் பட்டதாரியான பூஜா ராவ்டு, படித்து விட்டு வேலையில்லாமல் இருந்ததால் அவர் மீது குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

குடும்பத்தினரை ஏமாற்றுவதற்காக தனக்கு ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகர் பணி கிடைத்து இருப்பதாக போலி அடையாள அட்டையை தயார் செய்து நாடகமாடி வந்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் பூஜா ராவ்டுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story