தமிழகத்தில் விபத்து காய சிகிச்சை மையத்தை மேம்படுத்த ரூ.130 கோடி ஒதுக்கீடு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் விபத்து காய சிகிச்சை மையத்தை மேம்படுத்த ரூ.130 கோடி ஒதுக்கீடு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 22 Jan 2019 11:00 PM GMT (Updated: 22 Jan 2019 6:59 PM GMT)

தமிழகத்தில் விபத்து காய சிகிச்சை மையத்தை மேம்படுத்த ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திருச்சி,

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கடந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் புதிய முயற்சியாக விபத்து காய சிகிச்சை மையங்களை உருவாக்கினோம். சட்டமன்றத்தில் ‘விபத்து காய சிகிச்சை கொள்கை’ என்ற திட்டம் உருவாக்கப்படும் என அறிவித்து, அதன்படி, 75 இடங்கள் அடையாளம் காணப்பட்டு அமைக்கப்பட்டது. இது தாய் என்ற திட்டத்தின் கீழ் செயல்பட தொடங்கியது. இன்றைக்கு அத்திட்டம் பொதுமக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக கடந்த ஆண்டு ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 8.6 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாக இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அதற்காக சுதந்திரதின விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கினார். பிற மாநிலத்தவர் தற்போது தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள ‘தாய்’ திட்டத்தை பார்வையிட்டு செல்கிறார்கள்.

இந்த ஆண்டு விபத்து காய சிகிச்சை மையத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கத்தில் விபத்து அவசர சிகிச்சை மையம்போல உருவாக்கும் எண்ணத்தில் மேலும் ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவதுடன் தேவையான உயர் மருத்துவ உபகரணங்கள் அமைத்திடவும் வாய்ப்பு ஏற்படும். அத்துடன் சாலைகள் மேம்பாடு, போக்குவரத்து சீரமைப்பு, தாய் திட்டம் ஆகிய மூன்றும் சேர்ந்ததால் காயம்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கையை குறைத்து வருகிறோம். வருங்காலத்தில் விபத்து காயங்கள் அடைபவர்களுக்கு இறப்பு நேரிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உடல் உறுப்புகள் தானம் வழங்குவதில் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. சென்னை மட்டுமின்றி இதர நகரங்களிலும் உடல் உறுப்புகள் தானம் வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விரிவுப்படுத்த இருக்கிறோம். இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல கண்தானத்திலும், ரத்த தானத்திலும் தமிழகம்தான் முதலிடம். கண்தானத்தை பொறுத்த அளவில், நம்மிடம் தேவைக்கு அதிகமாகவே கண்கள் பெறப்பட்டு கண் வங்கிகளில் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. கண்களுக்காக யாரும் காத்திருப்போர் பட்டியலில் இல்லை. உடல் உறுப்புதானத்தில் முன்பதிவு செய்தவர்கள் பலர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து நிருபர்கள், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஊர், ஊராக சென்று ஊராட்சி சபை கூட்டம் நடத்தி வருவது குறித்து கேட்டபோது, ‘அவர் தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊர், ஊராக செல்லவில்லை. தற்போது ஊர், ஊராக சென்று கலந்து கொண்டு வருகிறார். மு.க.ஸ்டாலின் குறித்து ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் கூறி விட்டார்’ என்றார்.

Next Story