புதுக்கோட்டை அருகே சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த தாய்-2 குழந்தைகள் பலி


புதுக்கோட்டை அருகே சோகம்: கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த தாய்-2 குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 22 Jan 2019 11:15 PM GMT (Updated: 22 Jan 2019 7:23 PM GMT)

புதுக்கோட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் காயமடைந்த தாய் மற்றும் 2 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள தொட்டியபட்டியை சேர்ந்தவர் பழனிவேலு. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொன்னுமணி (வயது 28). இவர்களுக்கு சஞ்சீவி (3) என்ற மகனும், சங்கவி (2) என்ற மகளும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி வீட்டில் பொன்னுமணி சமைத்து கொண்டிருந்தார். வீட்டிற்குள் 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சமையல் கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்து தீப்பற்றியது. இதில் பொன்னுமணியும் 2 குழந்தைகளும் பலத்த தீக்காயமடைந்தனர். மேலும் வீடும், அதில் இருந்த பொருட்களும் சேதமடைந்தன.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் தீக்காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் மீண்டும் மேல்சிகிச்சைக்காக அவர்கள் 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த பொன்னுமணி உள்பட 3 பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கியாஸ் சிலிண்டர் விபத்தில் தாய் மற்றும் 2 குழந்தைகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் இலுப்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story