புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்


புளியந்தோப்பில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்று கணவன் தற்கொலை 3 மகன்கள் அனாதையான பரிதாபம்
x
தினத்தந்தி 23 Jan 2019 11:30 PM GMT (Updated: 23 Jan 2019 7:15 PM GMT)

புளியந்தோப்பில், நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்று விட்டு கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவர்களின் 3 மகன்களும் அனாதைகளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

திரு.வி.க.நகர், 

சென்னை புளியந்தோப்பு மசூதி தெருவைச் சேர்ந்தவர் துக்காராம்(வயது 42). இவருடைய மனைவி தாராபாய் (33). இவர்களுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய்ராம் (14), 7-ம் வகுப்பு படிக்கும் அனுமந்த்ராம்(12) மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் ஸ்ரீராம் (10) என 3 மகன்கள் உள்ளனர்.

துக்காராம் கொரட்டூரில் உள்ள செருப்பு கடையிலும், தாராபாய் வில்லிவாக்கத்தில் உள்ள காய்கறி கடையிலும் வேலை செய்து வந்தனர். மனைவி தாராபாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் அடிக்கடி துக்காராம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.

நேற்றுமுன்தினம் இரவு மகன்கள் 3 பேரும் தூங்கிய பிறகு 11 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த துக்காராம், வழக்கம்போல் தனது மனைவி தாராபாயிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தாராபாய் தனது மகன்களுடன் சேர்ந்து தூங்கிவிட்டார்.

ஆனால் மனைவி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த துக்காராம், மகன்களுடன் தூங்கிக் கொண்டு இருந்த தாராபாய் தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டார். இதில் தாராபாய் தலை நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவரது உடலை போர்வையால் மூடிவிட்டு, துக்காராம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி எதையும் அறியாமல் மகன்கள் 3 பேரும் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தனர்.

நேற்று காலை 7 மணிக்கு எழுந்த மூத்த மகன் சஞ்சய்ராம், தனது தந்தை துக்காராம் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதை அறியாமல் அருகில் தனது தாய் தூங்கிக்கொண்டு இருப்பதாக நினைத்து பதற்றத்துடன் தாய் மீது இருந்த போர்வையை விலக்கி அவரை எழுப்ப முயன்றார்.

அப்போது தாயும் தலை நசுங்கி பிணமாக கிடப்பதை கண்டு அலறியபடி வெளியே ஓடிவந்தார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போதுதான் மனைவியை கொன்றுவிட்டு துக்காராம் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் சாஜிபா மற்றும் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்று கணவரும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களின் 3 மகன்களும் அனாதைகளாக நிற்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் கண்ணீர் வடித்தனர்.

போலீசார் 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று ஆலோசனைகள் வழங்கினர். 3 பேரும் தடையின்றி படிப்பை தொடர அனைத்து ஏற்பாடுகள் செய்வதாக ஆறுதல் தெரிவித்து அவர்களை உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியது.

Next Story