சின்னமனூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவன் பலி


சின்னமனூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 27 Jan 2019 11:00 PM GMT (Updated: 27 Jan 2019 8:31 PM GMT)

சின்னமனூர் அருகே லாரி மோதியதில் பள்ளி மாணவன் பலியானார்.

சின்னமனூர்,

சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி ஜெயப்பிரியா. இவர்களுடைய மகன்கள் ராமு (வயது 10), தர்ஷன் (7). குணசேகரன் தனது மனைவியுடன் திருப்பூரில் தங்கி கூலிவேலை பார்த்து வருகிறார். இதனால் வேப்பம்பட்டியில் உள்ள தன்னுடைய தந்தை வீட்டில் மகன்களை தங்க வைத்திருந்தார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் ராமு 5-ம் வகுப்பு படித்து வந்தான். தர்ஷன் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் ராமு சைக்கிளில் சென்று கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி அவனுடைய சைக்கிள் மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ராமு பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஸ்ரீரங்கநாதபுரத்தை சேர்ந்த ஆதிநாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story