வேதாரண்யம் அருகே தென்னந்தோப்பில், பழங்கால சிவலிங்கம் கண்டெடுப்பு


வேதாரண்யம் அருகே தென்னந்தோப்பில், பழங்கால சிவலிங்கம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 30 Jan 2019 10:45 PM GMT (Updated: 30 Jan 2019 7:07 PM GMT)

வேதாரண்யம் அருகே தென்னந்தோப்பில் பழங்கால சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது.

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே செட்டிப்புலம் கிராமம் உள்ளது. கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி வீசிய கஜா புயல் காரணமாக இந்த கிராமத்தில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

புயலில் சேதமடைந்த தென்னந்தோப்புகளை சீரமைக்கும் பணியில் அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் (வயது65) என்பவருடைய தென்னந்தோப்பில் கஜா புயலால் விழுந்த தென்னைமரங்களின் வேர் பாகங்களை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தது. இதற்காக பணியாளர்கள் பொக்லின் எந்திரம் மூலம் நிலத்தை தோண்டினர்.

தோப்பில் ஒரு பகுதி நிலத்தை தோண்டும்போது மண்ணில் புதைந்த நிலையில் சிவலிங்கம் ஒன்று தென்பட்டது. இதையடுத்து நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சிவலிங்கத்தை வெளியே எடுத்தனர். பின்னர் சிவலிங்கத்துக்கு கிராம மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

இதுபற்றி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அதிகாரிகள், கரியாப்பட்டினம் போலீசாருடன் அங்கு சென்று சிவலிங்கத்தை பார்வையிட்டனர். நிலத்துக்கு அடியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் பழங்காலத்தை சேர்ந்தது என்று அதிகாரிகள் கூறினர். 

Next Story