உஷாரய்யா உஷாரு..


உஷாரய்யா உஷாரு..
x
தினத்தந்தி 3 Feb 2019 7:23 AM GMT (Updated: 3 Feb 2019 7:23 AM GMT)

அந்த பெண் துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்தாள். அந்த கடையின் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட்டில் அவன் தனது ஆட்டோவுடன் நின்றுகொண்டிருப்பான்.

ந்த பெண் துணிக்கடை ஒன்றில் வேலைபார்த்துக்கொண்டிருந்தாள். அந்த கடையின் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டான்ட்டில் அவன் தனது ஆட்டோவுடன் நின்றுகொண்டிருப்பான். இருவருக்கும் வாலிப வயது. அதனால் காதல்வலையில் விழுந்து விட்டார்கள். அவள் தனது காதலை பெற்றோரிடம் கூறினாள். ஆனால் அவர்கள் மகளின் காதலை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. ‘ஆட்டோதானே ஓட்டுறாரு.. வேறு நல்ல வேலை ஏதாச்சும் தேடிக்கொள்ளச் சொல்லு.. அப்போதுதான் நம்ம ஊர்க்காரங்க.. உறவுக்காரங்ககிட்டே மாப்பிள்ளை யாருன்னு கேட்டால் சொல்றதுக்கு மரியாதையாக இருக்கும். அதுவரை அவரோடு பேசாமல், ஊர் சுற்றாமல் அமைதியாக இரு’ என்றார்கள்.

அவளும், காதலரிடம் ஆட்டோ ஓட்டுவதை விட்டு விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளுங்கள் என்றாள். அவரும் வேறு வேலை தேட முன்வந்தார். ஆனால் பலரும் கவுரவம் என்று கருதுகிற மற்ற வேலைகளில், அவர் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் பணத்தில் கால்பங்கு அளவே கிடைத்தது. அதிக வருமானம் தரும் ஆட்டோ ஓட்டும் தொழிலை கைவிட காதலி கட்டாயப்படுத்துகிறாளே என்ற கவலையோடு அவர் இருந்துகொண்டிருந்த நேரத்தில், வெளிநாட்டில் வேலைகிடைக்கும் சூழல் ஒன்று உருவானது. அதை பயன்படுத்திக்கொள்ள முன்வந்தார்.

அவர் தனது காதலியிடம், ‘உன் அப்பா, அம்மா எதிர்பார்த்தபடி எனக்கு வெளிநாட்டில் நல்ல வேலைகிடைத்திருக்கிறது. நான் அங்கு சென்று, இரண்டு மூன்று வருடங்கள் சம்பாதித்துவிட்டு திரும்பி வருகிறேன். அதன் பி்ன்பு நமது திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்’ என்றார்.

அவள் அதை தனது பெற்றோரிடம் சொல்ல அவர்கள், ‘அவருக்கு நல்லவேலை கிடைத்துவிட்டது. இனியும் திருமணத்தை தள்ளிவைத்தால் அவருக்கு நம்மைவிட வசதியான இடத்தில் பெண் தேடிவிடுவார்கள். அதனால் உடனே திருமணத்தை நடத்திவிடலாம். திருமணம் நடந்த பின்பு அவர் வெளிநாடு செல்லட்டும்’ என்றார்கள். அவரும் அதை ஏற்றுக்கொள்ள, இருவீட்டு பெற்றோரும் கலந்துபேசி அந்த மாதத்திலே திருமணத்தை நடத்தி விட்டார்கள்.

அடுத்த சில வாரங்களிலே அவருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைத்துவிட, அவரும் பறந்துவிட்டார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இருவரும் செல்போனில் பேசி இன்பமடைந்துகொண்டார்கள். அவர் மாதந்தோறும் பணத்தை மனைவிக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். அவள் துணிக்கடை வேலையை விட்டுவிட்டு தனது தாயாரோடு பிறந்த வீட்டிலே வசித்துவந்தாள்.

திருமணமான எட்டாவது மாதத்தில் அவர் மனைவிக்கு விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி பரிசாக அளித்தார். அதனை அந்த நாட்டில் வேலைபார்த்த தனது நண்பன் ஒருவன் சொந்த ஊர் திரும்பியபோது அவனிடம் கொடுத்து அனுப்பினார். மனைவியும் அதை வாங்கி, ஜாலியாக பயன்படுத்திக் கொண்டிருந்தாள்.

இரண்டு மாதங்கள்தான் கடந்திருந்தன. திடீரென்று ஒருநாள் மனைவியிடம்கூட தகவல் சொல்லாமல் அவர் சொந்த ஊர் திரும்பினார். வக்கீல் ஒருவரோடு மாமியார் வீட்டில் வந்து இறங்கினார். அதை பார்த்ததுமே அவளுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பது புரிந்தது.

வக்கீல், அவளது கணவரிடம் இருந்த செல்போனை வாங்கினார். அதில் பதிவாகியிருந்த வீடியோக்களையும், சாட்டிங் தகவல்களையும் அவளிடம் காட்ட அவள் உடல் நடுங்க, வியர்த்து வழிந்தாள். ‘இ்வ்வளவு அப்பட்டமாக கையும் களவுமாக எப்படி பிடிபட்டேன்?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள். ‘கட்டிய கணவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த உன்னோடு இனியும் என்னால் வாழமுடியாது. விவாகரத்து தர சம்மதம் தெரிவித்துவிடு’ என்றார். ‘இனிமேல் திருந்தி வாழ்வேன்’ என்று அவள் கதறியது எதையும் அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. முறைப்படியான விவாகரத்து நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டார்.

என்ன நடந்தது தெரியுமா?

தினமும் இரவு பத்து மணிக்கு தனக்கு ‘குட்நைட்’ சொல்லிவிடும் மனைவி, அதன் பின்பும் இரவு 11.. 12.. மணிவரை வாட்ஸ்ஆப்பில் உலாவருவதை கணவர் கவனித்திருக்கிறார். தினமும் நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்த மனைவியின் வாட்ஸ் ஆப் செயல்பாடு, அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி யிருக்கிறது. அதனால் வெளிநாட்டில் இருந்து புதிய செல்போன் ஒன்று வாங்கி அதில் துப்பறியும், ‘ஸ்பை அப்ளிகேஷன் இன்ஸ்டால்’ செய்து, மனைவிக்கு கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவள், அந்த போன் மூலம் தான் மேற்கொள்ளும் அத்தனை விஷயங்களையும் வெளிநாட்டில் இருந்து கணவர் ரகசியமாக கண்காணிப்பது தெரியாமல் தனது ‘காதலர்’ ஒருவருடன் சாட்டிங் செய்திருக்கிறாள். வீடியோக்களை இருவரும் பகிர்ந்திருக்கிறார்கள். வெளியே நடத்தும் சந்திப்புகள் பற்றியும் விலாவாரியாக அலசியிருக்கிறார்கள். அனைத்து ஆதாரங்களையும் இருந்த இடத்திலே இருந்து எளிதாக கைப்பற்றிய கணவர், அவைகளை காட்டி விவாகரத்தும் செய்துவிட்டு மீண்டும் வெளிநாட்டிற்கு பறந்துவிட்டார்.

- உஷாரு வரும்.

Next Story