பாதாள சாக்கடையில் அடைப்பு: கொடுங்கையூரில், சாலையில் ஓடிய கழிவு நீர் பொதுமக்கள் அவதி


பாதாள சாக்கடையில் அடைப்பு: கொடுங்கையூரில், சாலையில் ஓடிய கழிவு நீர் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 3 Feb 2019 10:00 PM GMT (Updated: 3 Feb 2019 5:00 PM GMT)

கொடுங்கையூரில், திருவள்ளூர் சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சாலையில் ஓடிய கழிவு நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

சென்னை,

சென்னை கொடுங்கையூரில் திருவள்ளூர் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக கொடுங்கையூரில் இருந்து சென்னை சென்டிரல், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர பள்ளிகள், ஆஸ்பத்திரிகளும் உள்ளன. இந்தநிலையில் திருவள்ளூர் சாலையில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கழிவு நீர் காரணமாக அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் அவல நிலை இருக்கிறது. இதுதவிர சாலையில் குளம்போல் கழிவு நீர் தேங்கியிருப்பதால், அதில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்பும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறுகையில், “ கழிவு நீர் குழாயில் அடைப்பு, உடைப்பு ஏற்படுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த சமயத்தில் கழிவு நீரை உறிஞ்சுகிறார்களே தவிர, நிரந்தர தீர்வு எடுப்பதற்கு அதிகாரிகள் முன்வருவதில்லை. இதனால் நாங்கள் துர்நாற்றத்தில் தவிக்க வேண்டிய அவல நிலை இருக்கிறது. எங்கள் அவதியை புரிந்துகொண்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Next Story