தஞ்சையில், நினைவு நாளையொட்டி அண்ணாசிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு


தஞ்சையில், நினைவு நாளையொட்டி அண்ணாசிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2019 11:00 PM GMT (Updated: 3 Feb 2019 9:00 PM GMT)

தஞ்சையில் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் இருந்து மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி தலைமையில் மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் துரை.திருஞானம், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக அண்ணா சிலைக்கு வந்தடைந்தனர்.

இதையடுத்து அண்ணா சிலைக்கு நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒன்றிய செயலாளர் சாமிவேலு, காவேரி சிறப்பு அங்காடி முன்னாள் தலைவர் பண்டரிநாதன், மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் தொகுதி இணைச் செயலாளர் பாலைரவி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், மாணவரணி, மகளிரணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தஞ்சை கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை அருகில் இருந்து தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, நகர செயலாளர் நீலமேகம், தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு வந்தனர். பின்னர் தி.மு.க. நிர்வாகிகள் பலர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப் பட்டது. திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் அமர்சிங், பொதுச் செயலாளர் ஜெயக்குமார், நகர செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநில பொருளாளர் ரெங்கசாமி தலைமையில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், வக்கீல் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் விருத்தாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story