கடனை திரும்ப கொடுக்காததால் ஆத்திரம், ஸ்கூட்டர் மீது காரால் மோதி பெண்ணை கொன்ற 2 பேர் கைது


கடனை திரும்ப கொடுக்காததால் ஆத்திரம், ஸ்கூட்டர் மீது காரால் மோதி பெண்ணை கொன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2019 11:00 PM GMT (Updated: 4 Feb 2019 6:13 PM GMT)

விபத்தில் பெண் இறந்ததாக கருத்தப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடனை திரும்ப கொடுக்காத ஆத்திரத்தில் ஸ்கூட்டர் மீது காரை மோத செய்து கொலை செய்தது 9 மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது.

சூலூர், 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா எரிச்சநத்தம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி சரண்யா. இவர்கள் கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வந்தனர். மோகன் கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். சரண்யா சூலூரில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி சரண்யா, தனது கணவரின் தொழிற்சாலைக்கு சென்று வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பினார். இதையடுத்து கண்ணம்பாளையத்தில் இருந்து பள்ளபாளையம் செல்லும் வழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சரண்யா படுகாயத்துடன் கிடப்பதாக மோகனுக்கு தகவல் கிடைத்தது.

இதற்கிடையே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிரேத பரிசோதனையில் பெண்ணின் உடலில் ஆங்காங்கே வெட்டுக்காயங்கள் இருப்பதாக டாக்டர்கள் அறிக்கை கொடுத்தனர். இதனைத்தொடர்ந்து மோகன் மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து நடந்த விசாரணையில் சரண்யா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு இந்த கொலை தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் சரண்யாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

மோகன், சரண்யா இருவரும் சிவகாசியை சேர்ந்த காளிராஜ் (வயது34) என்பவரிடம் கடன் பெற்றுள்ளனர். பின்னர் கடனை திருப்பி செலுத்தாமல் கோவைக்கு வந்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த காளிராஜ் தனது உறவினரான அழகு கண்ணன் (22) என்பவருடன் கோவை வந்தார். பின்னர் மோகன், சரண்யா இருவரையும் நோட்டமிட்டு உள்ளனர். மேலும் அவர்களை கொலை செய்யவும் திட்டமிட்டனர்.

சம்பவத்தன்று சரண்யா தனியாக வருவதை அறிந்த 2 பேரும் அவரது ஸ்கூட்டர் மீது, காரால் மோதி உள்ளனர். பின்னர் படுகாயமடைந்த சரண்யாவை அவர்கள் 2 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர்.

இந்த வழக்கில் காளிராஜை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் சூலூரில் உள்ள நண்பரை தேடி காளிராஜ் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் காளிராஜை கைது செய்தனர்.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் அழகு கண்ணனையும் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் சூலூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story