அந்தியூர் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 காட்டுப்பன்றி குட்டிகள் மீட்பு


அந்தியூர் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 காட்டுப்பன்றி குட்டிகள் மீட்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 10:07 PM GMT (Updated: 9 Feb 2019 10:07 PM GMT)

அந்தியூர் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த 3 காட்டுப்பன்றிகள் குட்டிகள் மீட்கப்பட்டன.

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியில், வனக்கருப்பணசாமி கோவில் காட்டுப்பகுதியில் இருந்து 3 காட்டுப்பன்றி குட்டிகள் உணவு தேடி நேற்று காலை வெளியே வந்தன. அப்போது அந்த 3 பன்றி குட்டிகளும் வழி தவறி காட்டுக்குள் செல்லாமல் அந்தியூர் அருகே உள்ள அண்ணன்மார்பாளையம் கிராமத்துக்குள் நுழைந்துவிட்டன. அங்கு டாக்டர் தோட்டம் என்ற இடத்தில் உணவு தேடியபோது தரையோடு தரையாக இருந்த 80 அடி ஆழ கிணற்றின் உள்ளே 3 குட்டிகளும் தவறி விழுந்து விட்டன. கிணற்றில் ஓரளவு தண்ணீர் இருந்ததால், அதில் காட்டுப்பன்றி குட்டிகள் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தன.

சிறிது நேரத்தில் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்க தொழிலாளர்கள் வந்தனர். அப்போது கிணற்றுக்குள் காட்டுப்பன்றி குட்டிகள் விழுந்து தத்தளிப்பதை பார்த்து உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். இதேபோல் அந்தியூர் வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் நிலைய அதிகாரி ஈஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். இதேபோல் வனத்துறையினரும் வந்திருந்தனர்.

காட்டுப்பன்றிகள் அருகே சென்றால், அவைகள் ஆக்ரோ‌ஷமாகி கடித்துவிடும். அதனால் தீயணைப்பு வீரர்கள் ஹெல்மெட் மற்றும் கவச உடைகள் அணிந்துகொண்டு கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார்கள். பிறகு காட்டுப்பன்றி குட்டிகளின் காலிலும், வாயிலும் சுருக்கு கயிறு மாட்டி அவைகளை லாவகமாக மேலே கொண்டு வந்தார்கள்.

உடனே வனத்துறையினர் 3 காட்டுப்பன்றி குட்டிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா? என்று பார்த்தார்கள். ஆனால் காயம் ஏதும் இல்லை. குட்டிகள் ஆரோக்கியமாக இருந்தன. அதனால் அவைகளை பத்திரமாக சாக்குப்பைகளில் கட்டி பர்கூர் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்கள்.


Next Story