திணையத்தூர் கிராமத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகி வரும் தண்ணீர்


திணையத்தூர் கிராமத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் வீணாகி வரும் தண்ணீர்
x
தினத்தந்தி 11 Feb 2019 10:24 PM GMT (Updated: 11 Feb 2019 10:24 PM GMT)

திணையத்தூர் கிராமத்தில் குடிநீர் குழாய் உடைப்பால் தண்ணீர் வீணாகி வருகிறது.

தொண்டி,

திருவாடானை தாலுகா பாண்டுகுடி ஊராட்சி திணையத்தூர் கிராமத்தில் மாவூர் விலக்கு அருகே தொண்டி–மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குடிநீர் செல்லும் பெரிய அளவிலான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து வெளியேறும் தண்ணீர் அப்பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் குளிப்பது, துணி துவைப்பது, பாத்திரங்கள் கழுவுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அந்த தண்ணீர் கழிவுநீராக மாறி வருகிறது. மேலும் இந்த தண்ணீர் மீண்டும் குடிநீர் குழாய்களுக்குள் செல்வதால் குடிநீரோடு அசுத்த நீரும் சேர்ந்து வினியோகிக்கப்படும். இதனை குடிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர தொண்டி பேரூராட்சி மற்றும் பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுஉள்ளது. இதனை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் கண்டுகொள்ளவில்லை.

தற்போது இந்த பகுதியில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் தேவை அதிகம் உள்ள நிலையில் தண்ணீர் இதுபோன்று வீணாகி கொண்டிருப்பதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க தொண்டி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குடிநீர் வீணாகி வருவதை உடனடியாக கண்டறிந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story