ஆடியோ விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை முடிவை கைவிட வேண்டும் சட்டசபையில் பா.ஜனதா வலியுறுத்தல்


ஆடியோ விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை முடிவை கைவிட வேண்டும் சட்டசபையில் பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:30 PM GMT (Updated: 12 Feb 2019 9:53 PM GMT)

ஆடியோ உரையாடல் விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை முடிவை கைவிட வேண்டும் என்றும், ேதவைப்பட்டால் சபை கூட்டுக்குழு அல்லது நீதி விசாரணை நடத்தும் படியும் சட்டசபையில் பா.ஜனதா வலியுறுத்தியது.

பெங்களூரு, 

ஆடியோ உரையாடல் விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை முடிவை கைவிட வேண்டும் என்றும், ேதவைப்பட்டால் சபை கூட்டுக்குழு அல்லது நீதி விசாரணை நடத்தும் படியும் சட்டசபையில் பா.ஜனதா வலியுறுத்தியது.

சிறப்பு விசாரணை குழு

கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 6-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து கடந்த 8-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

குதிரை பேர ஆடியோவில் சபாநாயகரின் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் சட்டசபையில் விவாதிக்கப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு ஆடியோ விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை குழு (எஸ்.ஐ.டி.) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதற்கு பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

ஆடியோ விவகாரம்

இந்த நிலையில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 5-வது நாள் கூட்டம் நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், ஆடியோ விவகாரத்தை பா.ஜனதா கிளப்பியது. அக்கட்சியின் உறுப்பினர் மாதுசாமி பேசியதாவது:-

ஆடியோ விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்த சபாநாயகர் முடிவு செய்து மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இது சட்டசபை தொடர்பான விவகாரம். இதை சிறப்பு விசாரணை குழு மூலம் விசாரித்தால், போலீசார், கோர்ட்டு வரை செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

உங்களின் நோக்கம் நிறைவேறாது

இதனால் இந்த சபையின் கவுரவம் பாதிக்கப்படும். சபாநாயகர் மீது எழுந்த புகார் குறித்து விவாதித்தோம். உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்த சபையும், உங்கள் மீதான புகாரை ஏற்கவில்லை. உங்கள் மீது நாங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளோம்.

15 நாட்களில் அறிக்கை வேண்டும் என்று சபாநாயகர் சொல்கிறார். ஆனால் சிறப்பு விசாரணை குழுவால் அந்த காலக்கெடுவுக்குள் அறிக்கை அளிக்க முடியாது. அதனால் 15 நாட்களில் உண்மை நிலை தெரிய வேண்டும் என்ற உங்களின் நோக்கம் நிறைவேறாது.

தவறு செய்துவிட்டோம்

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, ஒரு விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. அதற்கு தற்போது முதல்-மந்திரியாக உள்ள குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இப்போது அவருக்கு சிறப்பு விசாரணை குழு மீது எப்படி நம்பிக்கை வந்தது?.

ஒருவேளை சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டால், அந்த குழுவுக்கு தகவல் கொடுப்பது யார்?. போலீசாருடன் நட்பு பாராட்டுவது நல்லதல்ல. இந்த சபை விவகாரத்தை, இதே சபையிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் நாங்கள் தவறு செய்து விட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதனால் இத்துடன் இந்த பிரச்சினையை விட்டுவிடுவது நல்லது.

மறுபரிசீலனை செய்ய...

ஒருவேளை விசாரணை நடைபெற்றே ஆக வேண்டும் என்று நீங்கள் (சபாநாயகர்) கருதினால், இந்த சபையின் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடலாம். அதனால் சபாநாயகர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு மாதுசாமி பேசினார்.

அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜனதா உறுப்பினர் சுரேஷ்குமார் பேசுகையில், “இந்த சபைக்கு தொடர்பான பிரச்சினையில் சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவிட்டால், நாட்டிலேயே இதுவே முதல் விவகாரமாக இருக்கும்.

சபை உரிமை குழு

இதுபோன்ற விவகாரங்கள் குறித்து விசாரிப்பதற்காக தான் சபை உரிமை குழு உள்ளது. நாங்கள் சில சிறப்பு விசாரணை குழு விசாரணையை பார்த்து இருக்கிறோம். புதிய நடைமுறையை உருவாக்க வேண்டாம். இந்த சபை தான் மக்கள் நீதிமன்றம்.

இந்த சபை உங்கள் மீதான புகார்களை நிராகரித்துவிட்டது. உரிமை குழு மூலம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துங்கள். இந்த குழு, எந்த நிபுணர்களின் ஆலோசனையும் பெற முடியும். இந்த விவகாரத்தில் புகார்தாரர் யார்?.

நியாயமாக இருக்குமா?

இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தவர் முதல்-மந்திரி. அவரது தலைமையிலான மாநில அரசு விசாரணை நடத்தினால் நியாயமாக இருக்குமா?. பட்ஜெட் நாளன்று அனைவரின் கவனமும் பட்ஜெட் மீது இருக்கும். அன்று உங்களின் பெயரை வெளியே கொண்டு வந்தது யார்?.

உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் சிறப்பு விசாரணை குழு விசாரணை தேவை இல்லை. பணம் கொடுக்கிறோம் என்று கூறி இருக்கிறார்கள். பண பரிவா்த்தனை நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தை வெளியே கொண்டு வந்தவர் முதல்-மந்திரி. இது ஒரு ‘ஸ்ட்ரிங் ஆபரேஷன்’ ஆகும். இது சாட்சி ஆகாது.

இவ்வாறு அவர் பேசினார்.

பணியில் உள்ள நீதிபதி

பின்னர் பேசிய பா.ஜனதா உறுப்பினர் போப்பையா, சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டால், அந்த குழு, முதல்-மந்திரி என்ன சொல்கிறாரோ அதை பின்பற்றும். நீதி விசாரணை நடத்தலாம். ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பதிலாக தற்போது பணியில் உள்ள நீதிபதியின் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடலாம். அதனால் சபாநாயகர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

அதைத்தொடா்ந்து பேசிய பா.ஜனதா உறுப்பினர்கள் பலரும், சிறப்பு விசாரணை குழு விசாரணையை கைவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தேவைப்பட்டால் சபை கூட்டுக்குழு அல்லது நீதி விசாரணை நடத்தலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Next Story