திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு


திருநாகேஸ்வரம் நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 6:43 PM GMT)

திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசாமி கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாதசாமி கோவில் உள்ளது. இங்கு நாகநாதசாமி, கிரிகுஜாம்பிகை அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். ராகு பகவான், நாக கன்னி, நாக வள்ளி ஆகிய 2 துணைவிகளுடன் மங்கள ராகுவாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருவது சிறப்பம்சம் ஆகும்.

நவக்கிரக பரிகார தலங்களில் நாகநாதசாமி கோவில், ராகுவுக்குரிய பரிகார தலமாக கருதப்படுகிறது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நாளில் இக்கோவிலில் ராகு பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ராகு பகவான் நேற்று மதியம் 1.24 மணிக்கு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி நேற்று கோவிலில் ராகு பெயர்ச்சி விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு கோவிலில் கடந்த 11-ந் தேதி இரவு யாகசாலை பூஜைகள் தொடங்கின. கோவில் தலைமை அர்ச்சகர் எஸ்.நாகராஜகுருக்கள், அர்ச்சகர்கள் உமாபதி, சங்கர், நாகநாத குருக்கள், சரவணன், மனோக்யநாத குருக்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை 2, 3-வது கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8 மணிக்கு 4-வது கால யாகசாலை பூஜை நடைபெற்றது. இதன் முடிவில் புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடானது. அப்போது ராகு பகவானுக்கு எண்ணெய், அரிசி மாவு, மஞ்சள், திரவியம், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பால், தயிர், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து புனித நீரால் கட அபிஷேகம் நடந்தது. பெயர்ச்சி நேரமான 1.24 மணிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து ராகு பகவானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி.கே.அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. க.தவமணி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் டி.எஸ்.செல்வராஜ், ஆர்.பாலசுப்பிரமணியன், சோழன் பட்டு கூட்டுறவு சங்க துணைத் தலைவர் எஸ்.வைரவேல், கிரிகுஜாம்பிகை பவுர்ணமி வழிபாட்டுக்குழு தலைவர் கோ.மருதப்பன், புஷ்பா ஜி.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ராகு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பகோணத்தில் இருந்து திருநாகேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், தக்கார் இளையராஜா, கோவில் மேலாளர் ராஜேந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Next Story