ஆரணி அருகே விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை


ஆரணி அருகே விஷம் குடித்து போலீஸ் ஏட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 Feb 2019 10:30 PM GMT (Updated: 15 Feb 2019 5:41 PM GMT)

ஆரணி அருகே போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி, 

ஆரணியை அடுத்த கீழ்அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியன் (வயது 50). இவர் போளூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சரஸ்வதி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கரண் (6), முகில் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

முனியன் கடந்த 18 நாட்களாக விடுப்பு எடுத்து வீட்டில் தங்கி இருந்தார். மேலும் முனியனுடன் பணிபுரிந்து வரும் ஏட்டுகள் அனைவருமே சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்டனர். மனைவியும் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார். இதனால் அவர் மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் நேற்று காலை கீழ்அய்யம்பேட்டை பகுதியில் உள்ள குளக்கரை அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியன் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story