கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு ரெயிலில் நூதனமாக கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்


கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு ரெயிலில் நூதனமாக கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Feb 2019 10:45 PM GMT (Updated: 17 Feb 2019 7:53 PM GMT)

கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு ரெயிலில் நூதனமாக கடத்தி வரப்பட்ட ரூ.7½ லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி,

மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இந்த ரெயிலில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பார்சல் புக்கிங் செய்து நூதன முறையில் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதைதொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பார்சல் புக்கிங் அலுவலகம் அருகே ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக பார்சலை எடுத்து வந்த ஒருவரை பிடித் தனர். அவரது பெயர் ரமேஷ்குமார் என்றும், வடமாநிலத்தை சேர்ந்தவர் எனவும், தற்போது திருச்சி சின்ன செட்டி தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது.

அந்த பார்சலை சோதனையிட்ட போது அதில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது. இதைதொடர்ந்து அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.7½ லட்சம் இருக்கும் என சுங்கத்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் நூதன முறையில் கடத்தி வரப்படுவது சமீபகாலமாக தொடர்கதையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் ரெயில்வே ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திருச்சி ரெயில்வேயில் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக வட்டாரத்தில் கேட்ட போது, ’பார்சல் புக்கிங் செய்து அனுப்பியதில் தங்களுக்கு எதுவும் தெரியாது’ என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே உயர் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளை கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக கடத்தி வரப்பட்டது சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதுபோல பல முறை கடத்தி வரப்பட்டிருக்கலாம் என கருதப்படு கிறது. இதற்கிடையில் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டு களை அழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

Next Story