தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 18 Feb 2019 10:00 PM GMT (Updated: 18 Feb 2019 6:09 PM GMT)

தொப்பூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகிறார்.

நல்லம்பள்ளி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதிலட்சுமி (வயது 22). இவர்களுக்கு கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 10 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஜோதிலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜோதிலட்சுமியின் தந்தை ஜோதிமணி, தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமான 2½ ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story