பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மக திருவிழா: குதிரை சிலைக்கு காகித மாலைகள் குவிந்தன


பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மக திருவிழா: குதிரை சிலைக்கு காகித மாலைகள் குவிந்தன
x
தினத்தந்தி 19 Feb 2019 10:30 PM GMT (Updated: 19 Feb 2019 7:42 PM GMT)

பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவில், குதிரை சிலைக்கு காகித மாலைகளை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலின் முன்பு 33 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய குதிரை சிலை ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலையாகும். இந்த கோவிலில் மாசிமக திருவிழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இதையடுத்து மாசிமக திருவிழா நேற்று தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பெரிய குதிரை சிலைக்கு 35 அடி உயரத்தில் காகித மாலைகள் அணிவிப்பது தான். இந்த நிகழ்ச்சி மாசிமகத்தின் முதல் நாள் காலை முதலே தொடங்கிவிட்டது. தமிழகம் எங்கும் இருந்து நேர்த்தி கடன் செய்து கொண்ட பக்தர்கள் காகித மாலைகளை லாரி, ஆட்டோ, வேன், கார் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று குதிரை சிலைக்கு அணிவித்தனர். இந்த ஆண்டு பளபளக்கும் பிளாஸ்டிக் மாலைகள் குறைந்து. காகித மாலைகள் அதிகமாக அணிவிக்கப்பட்டது. மேலும் பழங்களால் கட்டப்பட்ட மாலையும், பூ மாலையும் அதிகமாக அணிவிக்கப்பட்டது. மேலும் பால்குடம், காவடி, கரும்பில் தொட்டில் கட்டி வந்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

இந்த திருவிழாவிற்கு பல கிராமங்களில் இருந்து முன்பு கால்நடையாகவும், மாட்டு வண்டியிலும் வந்து தங்கி இருந்து பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளனர். அந்த பழமை மாறக்கூடாது என்பதற்காக பலர் இந்த ஆண்டும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாட்டு வண்டிகளில் வந்து தரிசனம் செய்தனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக கீரமங்கலம், அறந்தாங்கி, பேராவூரணி, திருச்சிற்றம்பலம், கொத்தமங்கலம், ஆலங்குடி மற்றும் பல ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. பக்தர்களுக்காக சிறப்பு சிகிச்சை பிரிவும், 108 ஆம்புலன்ஸ் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது.

கீரமங்கலம் போலீசாருடன், ஊர்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டத்தில் சமூக விரோதிகளை கண்டறிய பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

திருவிழாவை காண புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலில் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் அன்னதானம் செய்தனர். நேற்று முன்தினத்தில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) நடக்கும் தெப்பத்திருவிழாவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு மற்றும் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர். 

Next Story