எல்லாபுரம் அருகே கணவர் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


எல்லாபுரம் அருகே கணவர் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை
x
தினத்தந்தி 19 Feb 2019 8:58 PM GMT (Updated: 19 Feb 2019 8:58 PM GMT)

எல்லாபுரம் அருகே கணவர் திட்டியதால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கொல்லாபுரி. இவரது மகள் பாரதி (வயது 35). இவர் தனது கணவர் இறந்ததால் பெரியபாளையம் பகுதியில் காவலாளியாக பணி செய்து வந்தார்.

இந்த நிலையில், திருவள்ளூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சன் (32) என்பவரை கடந்த 14.12.2018 அன்று இரண்டாவதாக பாரதி திருமணம் செய்துகொண்டார். ஜான்சனுக்கும் இது 2-வது திருமணமாகும்.

இதற்கிடையே பாரதியின் தங்கை மகள் மஞ்சள் நீராட்டு விழா நேற்று முன்தினம் வெங்கல்லில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தற்கொலை

எனவே, மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தனது தந்தை வீட்டிற்கு பாரதி வந்திருந்தார். விழாவிற்கு தனது கணவர் ஊரில் இருந்து வந்தவுடன் அழைத்து செல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார். மற்ற அனைவரும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்ற மண்டபத்திற்கு சென்றுவிட்டனர்.

ஆனால், கணவர் ஜான்சன் வரவில்லை. மேலும், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய பாரதியை தரக்குறைவான வார்த்தைகளால் அவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பாரதியின் சகோதரர் மணிகண்டன் வெங்கல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story