வேலூர் அருகே மினிலாரி மோதி பெண் பலி


வேலூர் அருகே மினிலாரி மோதி பெண் பலி
x
தினத்தந்தி 19 Feb 2019 11:00 PM GMT (Updated: 19 Feb 2019 9:43 PM GMT)

வேலூர் அருகே ரோட்டை கடந்தபோது மினிலாரி மோதி பெண் பலியானார்.

வேலூர்,

வேலூரை அடுத்த மேல்மொணவூரை சேர்ந்தவர் சிற்றரசு. இவருடைய மனைவி இந்திராணி (வயது 45). இவர் ஷூ கம்பெனியில் வேலைபார்த்து வந்தார். சிற்றரசு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் இந்திராணி நேற்று காலை வழக்கம்போல வேலைக்கு புறப்பட்டார். ஷூ கம்பெனி பஸ்சில் செல்ல அவர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற மினிலாரி அவர் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இந்திராணி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இந்த நேரத்தில் அந்தவழியாக வந்த நந்தகுமார் எம்.எல்.ஏ. விரிஞ்சிபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்ததும் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று இந்திராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் தற்கொலை செய்துகொண்ட 4 மாதத்தில் மனைவியும் விபத்தில் பலியான சம்பவம் அந்தப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story