4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது


4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 21 Feb 2019 10:30 PM GMT (Updated: 21 Feb 2019 6:56 PM GMT)

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவள் 4 வயது சிறுமி. இவள் தனது வீடு அருகே நேற்று முன்தினம் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அவளது பக்கத்து வீட்டை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் சிறுமியிடம் ஏதோ கூறி தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். உடனே சிறுமியும் அவருடன் வீட்டுக்கு சென்றாள்.

அங்கு 19 வயது வாலிபரின் நண்பரான ராக்கி என்ற ராக்கிமுத்து (22) என்பவரும் இருந்தார். பின்னர் அவரும், 19 வயது வாலிபரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் சிறுமி அங்கிருந்து அழுதுகொண்டே தனது வீட்டுக்கு சென்றுவிட்டாள்.

இதை பார்த்த சிறுமியின் பெற்றோர் ஏன் அழுகிறாய்? என்று அவளிடம் கேட்டனர். அதற்கு அவள் நடந்த சம்பவத்தை கூறினாள். இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 19 வயது வாலிபரையும், ராக்கிமுத்துவையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இவர்கள் 2 பேரையும் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில் அவர்கள் 15 நாட்கள் காவலில் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story