மாவட்டத்தில் 362 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - கலெக்டர் தகவல்


மாவட்டத்தில் 362 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2019 11:00 PM GMT (Updated: 21 Feb 2019 9:48 PM GMT)

மாவட்டத்தில் இதுவரை 362 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் தேசிய பெண் குழந்தைகள் தின விழா நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் கல்வி கற்றால் தான் அவர்களின் சந்ததிக்கு நல்ல அடித்தளமாக இருக்கும். பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். பெண் குழந்தைகள் பிறந்தால் தவறு என்று நினைக்கக்கூடாது.

கடலூர் பின்தங்கிய மாவட்டமாக இருந்து வருகிறது. பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்தால் மட்டும் போதாது. அனைத்திலும் வளர்ச்சி பெற வேண்டும். பெண் குழந்தைகளாகிய நீங்கள் படித்து விட்டு ஐ.ஏ. எஸ்., டாக்டர் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். நீங்கள் நினைத்தால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

கடந்த 3 ஆண்டுகளில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 7 ஸ்கேன் மையங்கள் மூடப் பட்டுள்ளது. 362 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொட்டில் குழந்தை திட்டத்தில் 99 பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணம் நடந்தால், இது பற்றி உங்கள் பள்ளி தலைமை ஆசிரியருக்கோ, ஆசிரியர்களிடமோ தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்கும் மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப் படும். கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கை மூலம் பிறப்பின்படி பெண் குழந்தை பாலின விகிதம் 2015-ம் ஆண்டு 886-ல் இருந்து கடந்த ஆண்டு 929 ஆக அதிகரித்துள்ளது.

செல்போனில் பல நல்ல தகவல்கள் இருக்கிறது. அதை பார்க்க வேண்டும். குப்பைகளை ஒதுக்கிட வேண்டும். பெண் குழந்தைகள் நமது மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் பேசினார்.

தொடர்ந்து தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடந்த கட்டுரை, ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், மாநில, தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் கலெக்டர் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

மேலும் கராத்தே போட்டியில் முதல் பரிசு பெற்ற வாழப்பட்டு எடிபி பள்ளி மாணவி சோபியாவையும் கலெக்டர் அன்புசெல்வன் பாராட்டி பரிசு வழங்கினார்.

இதையடுத்து பெண் குழந்தைகளை காப்போம் திட்டம் குறித்து உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். முன்னதாக கலெக்டர் தலைமையில் மாணவிகள், ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்தனர். இந்த திட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அஞ்சல் அட்டைகளை கலெக்டர் வழங்கினார்.

விழாவில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி வரவேற்றார். நலப்பணிகள் இணை இயக்குனர் கலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, கடலூர் கல்வி மாவட்ட அலுவலர் சுந்தரமூர்த்தி, உதவி திட்ட அலுவலர் பாபுவிநாயகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ்குமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாதுகாப்பு அலுவலர் ஆண்டாள் நன்றி கூறினார்.

Next Story