மாவட்டம் முழுவதும் 123 மையங்களில் பிளஸ்-2 தேர்வை 36,957 மாணவ, மாணவிகள் எழுதினர் கலெக்டர் ரோகிணி ஆய்வு


மாவட்டம் முழுவதும் 123 மையங்களில் பிளஸ்-2 தேர்வை 36,957 மாணவ, மாணவிகள் எழுதினர் கலெக்டர் ரோகிணி ஆய்வு
x
தினத்தந்தி 1 March 2019 10:30 PM GMT (Updated: 1 March 2019 8:30 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நேற்று 123 மையங்களில் நடந்த பிளஸ்-2 தேர்வை 36 ஆயிரத்து 957 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வினை சேலத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார்.

சேலம், 

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 390 மாணவர்கள், 20 ஆயிரத்து 998 மாணவிகள் என மொத்தம் 39 ஆயிரத்து 388 பேர் பிளஸ்-2 தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இவர்களில் 1,320 மாணவர்களும், 1,111 மாணவிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 431 பேர் தேர்வு எழுத வரவில்லை.

இதனால் 36 ஆயிரத்து 957 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தமிழ் முதல்தாள் தேர்வை எழுதினர். இதற்காக மாவட்டம் முழுவதும் 123 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வையொட்டி மாணவ, மாணவிகள் பலர் காலை 8 மணி முதலே அந்தந்த தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர். முன்னதாக அவர்களில் பலர் பெற்றோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். மேலும் பல மாணவ, மாணவிகள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர்.

சில பள்ளிகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று அதிக மதிப்பெண் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு தேர்வு குறித்து அறிவுரை வழங்கினர்.

தேர்வுகளில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு தேர்வு நடைபெறும் மையங்களுக்கு அவ்வப்போது சென்று கண்காணித்தனர். இதுதவிர, தேர்வு நடைபெறும் மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தேர்வு மையங்களின் நுழைவு வாயிலில் ‘இது தடை செய்யப்பட்ட பகுதி‘ என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவிகள் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சில கைதிகள் சென்னை புழல் சிறையில் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.

சேலம் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஒன்றான சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உடனிருந்தார்.

இதுகுறித்து கலெக்டர் ரோகிணி கூறுகையில், சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 123 தேர்வு மையங்களில் 123 முதன்மை கண்காணிப்பாளர்களும், 140 துறை அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு மையங்களில் 2,956 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்பட மாணவர்களுக்கு தேவையான முன்னேற்பாடு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தண்டனை பற்றிய சுவரொட்டி தேர்வு மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது, என்றார்.

Next Story