பேஸ் புக் நட்பு-ஆபாசபடம்-பணம் பறிப்பு பொள்ளாச்சியை 7 வருடமாக கலக்கிய செக்ஸ் கும்பல் காமவலையில் சிக்கிய குடும்பபெண்கள், மாணவிகள்; அரசியல் பிரமுகர்களும் விழுந்தனர்


பேஸ் புக் நட்பு-ஆபாசபடம்-பணம் பறிப்பு பொள்ளாச்சியை 7 வருடமாக கலக்கிய செக்ஸ் கும்பல் காமவலையில் சிக்கிய குடும்பபெண்கள், மாணவிகள்; அரசியல் பிரமுகர்களும் விழுந்தனர்
x
தினத்தந்தி 2 March 2019 11:30 PM GMT (Updated: 2 March 2019 8:21 PM GMT)

பொள்ளாச்சியை 7 வருடமாக கலக்கிய செக்ஸ் கும்பல் சிக்கியது. அந்த கும்பலின் காம வலையில் குடும்ப பெண்கள், மாணவிகள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும் விழுந் துள்ளனர்.

பொள்ளாச்சி, 

‘பேஸ் புக்கில (முக நூல்) உங்கள் கவிதையை பார்த்தேன்.அருமை’- என்று தான் அந்த பெண்ணுக்கும், அந்த வாலிபருக்குமான நட்பு மங்களகரமாக தொடங்கியது. இவரது பாராட்டுக்களில் மயங்கித்தான் போனார் அந்த பெண். நாளடைவில் அவருடன் முக நூலில் பேசாமல் இருக்க முடியாது என்ற நிலையில் கட்டுண்டு போனார் அந்த இளம்பெண். ஆக தனது வலைக்குள் விழுந்துவிட்டார் என்பதை உணர்ந்ததும் நட்பை, காதலாக்க முயற்சி மேற்கொண்டார் அந்த மன்மதன். அதுவும் கூடிப்போகவே, ஒருநாள் உணர்ச்சிகளுக்கு வடிகால்தேடிக்கொண்டனர் இருவரும்.

தனக்கு அவன் வாழ்க்கை துணையாக வருவான் என்று நம்பினாள் அந்தபேதைபெண். ஆனால் அவனது பட்டியலில் தான் 101-வது பெண் என்பது சில காலத்துக்கு பிறகுதான் தெரிய வந்தது.

இடையில் தனது ஆபாசபடமும், வீடியோ காட்சியும் அவனது கையிலிருப்பதை கண்டு அதிர்ந்து போனாள். இதை கருவியாக வைத்து பலருக்கும் விருந்தாக்கபட்ட அவள், பின்னர் தான் பணத்துக்காக விலை போவதை உணர்ந்து கொண்டாள். தான் மட்டுமல்ல இதே போல வலையில் விழுந்த பல மாணவிகள், குடும்ப பெண்கள் என்று பலரும் இந்த குழுவில் இருப்பதும் கிட்டதட்ட திரைமறைவு விபசாரம் நடப்பதையும் அந்த பெண் புரிந்துகொண்டார்.

ஒரு கட்டத்தில் செக்ஸ் பலவீனம் கொண்ட பிரமுகர்கள், இளைஞர்கள் என்று இந்தகுழுவை அணுக, இதைதொழிலாக நடத்திவந்தவர்களின் பணப்பை நிறைய தொடங்கியது. பிரமுகர்களுக்கும் இந்த குழு தேவை என்பதால், அவர்களே இவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க உல்லாசத்துக்கு உல்லாசம், பணத்துக்கு பணம், பிரமுகர்களின் தோழமை செல்வாக்கு என்று ஆபாச படக்கும்பல் ஆனந்தம் அடைந்தது. அரசியல் பிரமுகர்களும் இந்த கும்பலால் குதுகலம் அடைந்தனர். அவர்களை தங்களுக்கு ஆசைதீர விருந்தாக்கினர் என்பதும் அதிர்ச்சியான தகவலாக உள்ளது.

இந்த நிலையில்தான் இந்த கும்பலின் அட்டூழியம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுவும் பொள்ளாச்சியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மூலம். இவரும் பேஸ்புக்கில் நட்பாக கலந்தவர். இவரை பேஸ்புக்கில் வீழ்த்தியவர்தான் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரது மகன் சபரிராஜன் (வயது 25). இவர் என்ஜினீயர்.

கடந்த 12-ந்தேதி அந்த மாணவியை சபரிராஜன் தொடர்பு கொண்டு ஊஞ்சவேலாம்பட்டிக்கு வருமாறு அழைத்தார். அங்கு சபரிராஜன் அவரது நண்பர்களான திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோருடன் காத்திருந்தார். பின்னர் மாணவி வந்ததும் அவரை காரில் ஏற்றிக் கொண்டு தாராபுரம் ரோட்டில் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் சபரிராஜன் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதை சதீஷ் செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த மாணவியை காரில் இருந்து அவர்கள் இறக்கி விட்டு சென்றனர். இதற்கிடையில் மாணவியின் ஆபாச படத்தை வைத்து அவர்கள் 4 பேரும் மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி பெற்றோரிடம் நடந்ததை கூறினார். அதை தொடர்ந்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் மாணவி புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு இன்னும் போலீசில் சிக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில் (33), பாபு (26), ஆச்சிபட்டி வசந்தகுமார் (26), ஜோதி நகர் பார் நாகராஜ் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் நாகராஜ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை தனிப்படை போலீசார் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். திருநாவுக்கரசு ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, காரில் லேப்-டாப் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது தெரிவருகிறது. இந்த கும்பல் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

இந்த வழக்கில் தொடர்புடைய சபரிராஜன் முகநூலில் (பேஸ்புக்) தனது அழகான படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் சபரிராஜன் என்கிற தனது பெயரை ரிஸ்வந்த் என மாற்றினார். முகநூல் மற்றும் தனது நண்பர்கள் மூலம் சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் செல்போன் எண்களை வாங்குவது வழக்கம். அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் சபரிராஜன் பெண்களை தன் வலையில் வீழ்த்திவிடுவார்.

இதில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை ஒருவரின் செல்போன் எண்ணை சபரிராஜன் மாலை 5 மணிக்கு வாங்குகிறார். அந்த போனில் பேசிய 2 மணிநேரத்தில் ஆசிரியை மயங்கி விடுகிறார். இதனால் அவரது வீட்டிற்கு சென்று விடுகிறார் அந்த ஆசிரியை. பின்னர் என்ன? அங்கு அவருடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த ஆசிரியையை தன் இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.

இதேபோன்று பெண்களை எளிதில் பேசி மயக்கும் சபரிராஜன் ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் தோட்டத்தைதான் அதற்கு உல்லாசபுரியாக பயன்படுத்தி வந்துள்ளார். அங்குதான் பெண்களை காரில் அழைத்து செல்வார். இதற்கு திருநாவுக்கரசின் சொகுசு காரை பயன்படுத்தி உள்ளனர். அந்த கார் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். இதனால் உள்ளே யார்? இருக்கிறார் என்பது தெரியாது. இதுதொடர்பாக வெளியான ஒரு வீடியோ பதிவில் முதலில் அறைக்குள் சபரிராஜன் அழைத்து சென்றதும், அந்த பெண் எதிர்பார்க்காத தருணத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.

இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவிக்கவில்லை. அதன்பிறகு ஆடைகளை களைய முயன்ற போது, அந்த பெண் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் ரிஸ்வந்த் வேண்டாம் இங்கிருந்து அழைத்து சென்று விடு என்கிறார். ஆனால் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணின் பாதி ஆடையை களைகிறார். அப்போது சொல்லி வைத்தது போன்று திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் செல்போனில் படம் பிடித்தவாறு உள்ளே வருகின்றனர். அந்த பெண் அண்ணா என்னை விட்டு விடுங்கள். தெரியாமல் வந்து விட்டேன் என்று கதறுகிறாள். ஆனால் கல்நெஞ்சக்காரர்கள் அந்த பெண்ணை விடாமல் துன்புறுத்துக்கின்றனர்.

இதேபோன்று மற்றொரு வீடியோவில் சபரிராஜன் ஒரு பெண்ணின் மேலாடையை களைகிறார். அப்போது பின்புறமாக கையை கொண்டு சென்று வெளியில் நிற்கும் நண்பர்களுக்கு சைகை மூலம் உள்ளே வாருங்கள் என்கிறார். பின்னர் அவர்கள் உள்ளே வருவது போன்ற வீடியோ பதிவும் சிக்கி உள்ளது. என்ஜினீயரான சபரிராஜனின் மயக்கும் பேச்சு, அழகான புகைப்படத்தை பார்த்து ஏராளமான மாணவிகள், பெண்கள் தங்களது வாழ்க்கையை தொலைத்து விட்டனர். இதில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டர் ஒருவரை 4 நாட்கள் வரை வைத்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

கோவையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழக பேராசிரியரும், பொள்ளாச்சியை சேர்ந்த பிரபல டாக்டர் ஒருவரது மனைவியும், தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கும்பல் வசதியான வீட்டு குடும்ப பெண்கள், கல்லூரி மாணவிகளை குறி வைத்தே இதில் ஈடுபட்டு உள்ளனர். ஏனென்றால் பணக்கார வீட்டு பெண்கள் புகார் கொடுக்க வர மாட்டார்கள் என்ற தைரியத்திலும், செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும் என்ற கோணத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சம்பவம் வெளியில் தெரியாமல் இருந்து உள்ளது. தற்போது ஒரு மாணவி துணிச்சலாக புகார் கொடுக்க வந்ததால் இந்த ஆபாச கும்பல் பற்றிய அந்தரங்கம் வெட்ட வெளிச்சமாகி வெளியே வந்துள்ளது. இதுவரைக்கும் 100-க்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் 30 வீடியோக்களை வரை ஆதாரமாக கிடைத்துள்ளன. ஆபாச படத்தை வைத்து மிரட்டி மீண்டும் அவர்களை வரவழைத்தும் குரூப்பாகவும், தனி, தனியாகவும் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.

அந்த பெண்களிடம் இருந்து நகை, பணத்தையும் பறித்ததாகவும் தெரிகிறது. மேலும் ஒரு சில பெண்களை பொள்ளாச்சியில் உள்ள முக்கிய நபர்களுக்கு விருந்தாக்கி அதன் மூலம் அந்த கும்பல் பணம் சம்பாதித்து உள்ளது. இதில் முக்கிய அரசியல் கட்சி பிரமுகரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவருகிறது. திருநாவுக்கரசை பிடித்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக புகார் கொடுக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story