சிங்கப்பூரில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் விபத்தில் சாவு


சிங்கப்பூரில் வேலை பார்த்த கறம்பக்குடி வாலிபர் விபத்தில் சாவு
x
தினத்தந்தி 2 March 2019 11:00 PM GMT (Updated: 2 March 2019 8:23 PM GMT)

சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த கறம்பக்குடி வாலிபர் விபத்தில் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள குளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கபிரியல் மகன் குமார் (வயது 33). இவரது மனைவி ரோஸி. இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்த குமார் குடும்ப வறுமை காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்றார். அங்கு லாரி டிரைவராக வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் குமாரின் மனைவி ரோஸிக்கு செல்போனில் பேசிய ஒருவர், குமார் விபத்தில் இறந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் விபத்து எப்படி ஏற்பட்டது? குமார் ஓட்டி சென்ற லாரி விபத்துக்குள்ளானதா? என்பது போன்ற எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் குடும்பத்தினர் சிங்கப்பூரில் உள்ள அவரது நண்பர்களிடம் விசாரித்தனர். அவர்கள் குமார் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

தற்போது குமாரின் உடல் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும், மரணம் குறித்து விசாரிக்கவும் இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை கலெக்டருக்கு குமாரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பிழைப்பு தேடி வெளிநாடு சென்ற வாலிபர் விபத்தில் பலியானதாக வந்த தகவலால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. 

Next Story