நெல்லை அருகே பரிதாபம்: காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை


நெல்லை அருகே பரிதாபம்: காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 2 March 2019 10:29 PM GMT (Updated: 2 March 2019 10:29 PM GMT)

நெல்லை அருகே காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

நெல்லை,

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த ராஜபதி கிராமத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 37), கார் டிரைவர். இவரும், பாளையங்கோட்டை அருகே உள்ள திம்மராஜபுரத்தை சேர்ந்த பேச்சியம்மாளும் (27) காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். தற்போது பேச்சியம்மாள் 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் போதிய வருமானம் இல்லாததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் மாலையிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.

பின்னர் பேச்சியம்மாள் வெளியே கடைக்கு சென்று பொருட்கள் வாங்க சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பேச்சிமுத்து மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடையில் இருந்து வீடு திரும்பிய பேச்சியம்மாள், கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர்களது வீட்டில் விளக்கு எரியவில்லை. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது, கணவன்-மனைவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெபா, சப்-இன்ஸ்பெக்டர் லிடியா செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவர்களது உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களுடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story