பஸ்–ஸ்கூட்டர் மோதல்; பெண் அதிகாரி பலி அரசு வேலை கிடைத்த 4 மாதத்தில் துயரம்


பஸ்–ஸ்கூட்டர் மோதல்;  பெண் அதிகாரி பலி அரசு வேலை கிடைத்த 4 மாதத்தில் துயரம்
x
தினத்தந்தி 5 March 2019 11:00 PM GMT (Updated: 5 March 2019 2:48 PM GMT)

திருவட்டார் அருகே ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், தோட்டக்கலைத்துறை பெண் அதிகாரி பலியானார். அரசு வேலை கிடைத்த 4 மாதத்தில் இந்த துயர சம்பவம் நடந்தது.

திருவட்டார்,

பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் வைஷ்ராணி(வயது 23). இவர் திருவட்டார் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இவர் தினமும் அலுவலகத்துக்கு ஸ்கூட்டரில் சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம்.

அதே போல் நேற்று காலை வைஷ்ராணி, தனது ஸ்கூட்டரில் வேலைக்கு புறப்பட்டார். அவர் கல்லடிமாமூடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே மார்த்தாண்டத்தில் இருந்து குலசேகரம் நோக்கி அரசு பஸ் வந்தது. பஸ்சும்–ஸ்கூட்டரும் திடீரன மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட வைஷ்ராணி, பின்னால் வந்த டெம்போவின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

 இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே வைஷ்ராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 இதுபற்றி தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வைஷ்ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வைஷ்ராணிக்கு 4 மாதங்களுக்கு முன் தான் அரசு தோட்டக்கலைத்துறையில் பெண் அதிகாரியாக வேலை கிடைத்தது. அதற்குள் விபத்தில் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story