கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர் போன்ற இயற்கை பானங்களை அருந்த வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை


கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர் போன்ற இயற்கை பானங்களை அருந்த வேண்டும் கலெக்டர் பிரபாகர் அறிவுரை
x
தினத்தந்தி 9 March 2019 10:30 PM GMT (Updated: 9 March 2019 6:20 PM GMT)

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர் போன்ற இயற்கை பானங்களை அருந்த வேண்டும் என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தினால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைவெயிலின் தாக்கம் மனிதனுக்கு உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்கு பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடை குறைவான, தளர்வான மற்றும் வெளிர்நிற ஆடைகளை உடுத்த வேண்டும். வெளியில் செல்லும் போது தலைக்கு தொப்பி அல்லது குடை, பாதுகாப்பான குளிர் கண்ணாடி ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.

பயணங்களின் போது கையுடன் குடிநீர் எடுத்து செல்ல வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் போன்ற இயற்கை பானங்களை அருந்த வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்பதாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்க வேண்டும். நமது வசிப்பிடத்தில் பகல் நேரங்களில் திரை சீலைகள், கூடாரங்கள், மறைப்பான்கள் ஆகியவற்றால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும், காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறும் அமைத்து கொள்ள வேண்டும்.

வெட்ட வெளியில் பணியாற்றுபவர்கள் ஈரமான உடைகளை பயன்படுத்த வேண்டும். அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். தேவைக்கேற்ப விசிறிகளை பயன்படுத்த வேண்டும். நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். கால்நடைகளை நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீரை வழங்க வேண்டும். வேலை செய்யும் இடங்களில் அனைவருக்கும் குளிர்ந்த குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெயில் பாதிப்பினால் அசதி, தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மற்றவர் உதவியுடன் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

அதே நேரத்தில், வெயில் நேரத்தில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் செல்லவிடக்கூடாது. அடர் வண்ணம் கொண்ட, குறிப்பாக கருமை வண்ணம் கொண்ட ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. கடும் வெயிலில் வெளியில் செல்லக்கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் போது, கடுமையான பணிகளை செய்யக்கூடாது. உடலின் உஷ்ணத்தை அதிகப்படுத்த கூடிய காபி, தேநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் மது ஆகியவற்றை அருந்தக் கூடாது. புரதச்சத்து நிறைந்த மற்றும் பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story