ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்; 7 பேர் கைது பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு


ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து காத்திருப்பு போராட்டம்; 7 பேர் கைது பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 March 2019 11:15 PM GMT (Updated: 10 March 2019 6:43 PM GMT)

வேதாரண்யம் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தையொட்டி அமைக்கப்பட்ட பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேதாரண்யம்,

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நாளுக்கு நாள் விவசாயம் நலிவடைந்து வருகிறது. டெல்டாவில் ஆண்டுக்கு 3 போகங்கள் விளைவிக்கப்பட்டு வந்த நெல், தற்போது ஒரு போகம் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்காரவாசல், கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கரியாப்பட்டினத்தில் கிராம மக்கள் கடந்த 3-ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் கரியாப்பட்டினம், செட்டிப்புலம், வடமழை, மணக்காடு, தென்னம்புலம், மருதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி அங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

அந்த பந்தலில் அமர்ந்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று 8-வது நாட்களாக காத்திருப்பு போராட்டம் நீடித்தது.

இந்த நிலையில் நேற்று அங்கு சென்று கரியாப்பட்டினம் போலீசார் திடீரென பந்தலை அகற்றினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து (வயது65), கோவிந்தராசு (71), நடராஜன் (74), ரமேஷ் (40), அகிலன் (37), குமார் (40), பாலசுப்பிர மணியன் (37) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

இதை கண்டித்து அங்கு கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story