கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலி கார் மோதியது


கீழையூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலி கார் மோதியது
x
தினத்தந்தி 10 March 2019 10:15 PM GMT (Updated: 10 March 2019 7:16 PM GMT)

கீழையூர் அருகே கார்மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பலியானார்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கிளியூர் ஒன்றியம் மடப்புரம் நடுத்தெருவை சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் பசுபதி (வயது 30). விவசாயி. இவர் சம்பவத்தன்று மாலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருப்பூண்டி கடைத்தெரு அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பசுபதி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பசுபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இறந்த பசுபதிக்கு மேகலா என்ற மனைவியும் அகிலன் என்ற மகனும், அகிலா என்ற மகளும் உள்ளனர்.

Next Story