வளசரவாக்கத்தில் பயங்கரம் தொழிலாளியை குத்தி கொன்ற தந்தை கைது


வளசரவாக்கத்தில் பயங்கரம் தொழிலாளியை குத்தி கொன்ற தந்தை கைது
x
தினத்தந்தி 11 March 2019 10:30 PM GMT (Updated: 11 March 2019 5:27 PM GMT)

வளசரவாக்கத்தில், தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் ராமாபுரம், செந்தமிழ் நகர், வேம்புலி தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). பெயிண்டர். இவருடைய மனைவி லோகநாயகி. இவர்களுடைய மகன் சதீஷ் (22). இவர், தச்சு தொழிலாளி. சங்கீதா என்ற மகளும் உள்ளார்.

தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. லோகநாயகியும், அவரது மகளும் இருவரையும் சமாதானம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் அனைவரும் தூங்கச்சென்று விட்டனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை திடீரென சதீசின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த லோகநாயகி, அவரது மகள் சங்கீதா இருவரும் மின் விளக்கை போட்டு பார்த்தனர். அங்கு மகன் என்றும் பாராமல் சதீசை, சக்திவேல் கத்தியால் சரமாரியாக குத்திக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை தடுக்க முயன்றபோது லோகநாயகி, சங்கீதா இருவருக்கும் கைகளில் வெட்டு விழுந்தது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சதீஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சதீசை கண்டு இருவரும் கதறி அழுதனர்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், கத்தியுடன் தப்பிச்செல்ல முயன்ற சக்திவேலை மடக்கிப்பிடித்து ராயலா நகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கொலையான சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும் அவர் எதற்காக தனது மகனை கத்தியால் குத்திக்கொலை செய்தார்? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

பெற்ற மகனை தந்தையே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் வளசரவாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story