பொள்ளாச்சி சம்பவத்திற்கு கண்டனம்: சேலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


பொள்ளாச்சி சம்பவத்திற்கு கண்டனம்: சேலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 March 2019 10:15 PM GMT (Updated: 13 March 2019 9:24 PM GMT)

பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் கொடுமை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சேலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட ஏராளமான பெண்களை கடத்தி சென்று அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்்.

அதன் தொடர்ச்சியாக சேலம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று மதியம் வகுப்புகளை புறக்கணித்து விட்டு வெளியில் வந்தனர். பின்னர் கல்லூரி நுழைவுவாயில் முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்திய மாணவர் சங்க துணை செயலாளர் கவுதம் தலைமை தாங்கினார்.

கல்லூரி மாணவிகள், பெண்களை பாலியல் தொல்லைக்கு உட்பட்டு அவர்களை கொடூரமாக தாக்கியதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனவும், மேலும் இதில் தொடர்பு உடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாணவர்களின் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story