நல்லூர் அருகே, இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ.விசாரணை


நல்லூர் அருகே, இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ.விசாரணை
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 9:58 PM GMT)

நல்லூர் அருகே இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நல்லூர்,

திருப்பூரை அடுத்த நல்லூரில் இருந்து முத்தணம்பாளையம் செல்லும் வழியில் உள்ள பொன்முத்து நகர், 5-வது வீதியை சேர்ந்தவர் ராஜராஜ சோழன் (வயது 32), தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (வயது 27). இந்த தம்பதிக்கு மீனா (2½ வயது), கார்த்திகா(3 மாதம்) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று மதியம் 12 மணி அளவில் அவர்கள் இருவர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெயந்தி கோபித்துக்கொண்டு வீட்டின் உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டதாக தெரிகிறது. ராஜராஜ சோழன் 3 மாத குழந்தையுடன் வெளியில் நின்றதாக கூறப்படுகிறது.

நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ராஜராஜசோழன் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஜெயந்தி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்துள்ளார்.

அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து திருநெல்வேலியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து வந்து ஜெயந்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயந்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆகியுள்ளதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தப்படுகிறது. 

Next Story