சென்னை விமான நிலையத்தில் ரூ.77½ லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.77½ லட்சம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கொழும்பில் இருந்து விமானம் வந்தது. அதில் சுற்றுலா விசாவில் கொழும்பு சென்றுவிட்டு சென்னைக்கு திரும்பி வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த 5 பேர் வந்தனர்.
சந்தேகத்தின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் அவர்கள் 5 பேரின் உடைமைகளையும் சோதனை செய்தனர். அதில் அவர்கள், தங்க நகைகள், தங்க கட்டிகள், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.72 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ தங்கமும், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களையும் பறிமுதல் செய்தனர்.
மற்றொரு விமானம்
இதேபோல் கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அதில் அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 6 பேரிடம் இருந்து கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.77 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 150 கிராம் தங்கமும், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களையும் பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவர்களில் 2 பேரை கைது செய்தனர். மற்ற 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story