வெயிலை சமாளிக்க பெரம்பலூர் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்


வெயிலை சமாளிக்க பெரம்பலூர் நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 17 March 2019 10:45 PM GMT (Updated: 17 March 2019 7:25 PM GMT)

வெயிலை சமாளிக்க பெரம்பலூர் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக குளியல் போட்டனர்.

பெரம்பலூர்,

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பெரம்பலூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டதே என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணி போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டும் சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கருப்பு கண்ணாடிகளை அணிந்து செல்கின்றனர். இந்த வெயில் கொடுமையால் ஏற்படும் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் ஜூஸ், கரும்புச்சாறு, நுங்கு, தர்ப்பூசணி, இளநீர், முலாம் பழச்சாறு, மோர், கம்மங்கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதி, விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

உற்சாக குளியல்

நேற்று வெயிலின் தாக்கம் பெரம்பலூரில் அதிகமாக காணப்பட்டதால் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதாலும், வெயிலை சமாளிப்பதற்காக நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வந்த வண்ணம் இருந்ததை காணமுடிந்தது. இதில் நிறைய பேர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் நீச்சல் குளத்தில் உற்சாகமாக ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் குளியலை போட்டு வெயிலின் கொடுமையை சமாளித்தனர். கோடை காலத்தில் வழக்கத்தை விட நீச்சல் குளத்துக்கு குளிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என, அதில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த நீச்சல் குளத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி மேற்கொள்ளவும், குளிக்கவும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 8 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதியில்லை. நீச்சல் குளத்தை பராமரிப்பதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமை விடுமுறை விடப்படுகிறது.

இப்போதே இந்த அளவிற்கு வெயில் கொளுத்துவதையே பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களால் சமாளிக்க முடியவில்லை. அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் மே மாதம் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அந்த வெயிலை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பதை பொதுமக்கள் தற்போதே புலம்பி வருகின்றனர். 

Next Story