குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 19 March 2019 10:21 PM GMT (Updated: 19 March 2019 10:21 PM GMT)

சிங்கம்புணரியில் இருந்து பிரான்மலை செல்லும் சாலை குண்டும் குழியுமாகி, பள்ளமாகி வருவதால் அதை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே பிரசித்தி பெற்ற பிரான்மலை உள்ளது. இங்குள்ள சுமார் 2 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட மலையில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஆலய வழிபாட்டிற்கும், சுற்றி பார்க்கவும் தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் சிறந்த சுற்றுலா தளமாகவும் விளங்கி வருகிறது. இந்தநிலையில் சிங்கம்புணரியில் இருந்து வேங்கைப்பட்டி வழியாக பிரான்மலை செல்லும் சுமார் 6 கிலோமீட்டர் சாலை மிக குறுகலாகவும் குண்டும் குழியுமாகவும் காட்சி அளிக்கிறது.

மேலும் அதில் பெரிய அளவிலான பள்ளங்கள் தோன்றி உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் இருபுறங்களிலும் வயல்வெளி உள்ளது. மேலும் குறுகிய சாலையான இதில் ஒரு வாகனம் செல்லும் போது, எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாமல் குறிப்பிட்ட தூரத்திற்கு பின்னோக்கி சென்றால் தான் வழி விட முடியும்.

சில சமயங்களில் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட ஒதுங்கும் வாகனங்கள், வயல்வெளியில் இறங்கி பள்ளங்களில் உருண்டு விபத்துக்குள்ளாகி வருகின்றன. மேலும் வெளியூரில் இருந்து பிரான்மலைக்கு சுற்றுலா வரும் வாகனங்கள் குண்டும் குழியுமான கோவில்பட்டி, வேங்கைப்பட்டி சாலையை பயன்படுத்தாதாமல், அதிக தூரமான கிருங்காகோட்டை சாலையை பயன்படுத்த வேண்டி உள்ளது.

இதனால் சுற்றுலா பயணிகளும், இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கடும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே குண்டும் குழியுமாகி, பள்ளமாகி போன கோவில்பட்டி, வேங்கைகைப்பட்டி சாலையை அகலப்படுத்தி விபத்துக்களை தடுக்கும் விதமாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story