திருப்பனந்தாள் அருகே, முன்விரோதத்தில் வாலிபர், கத்தியால் குத்திக்கொலை 3 பேர் படுகாயம்


திருப்பனந்தாள் அருகே, முன்விரோதத்தில் வாலிபர், கத்தியால் குத்திக்கொலை 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 March 2019 11:00 PM GMT (Updated: 31 March 2019 9:24 PM GMT)

திருப்பனந்தாள் அருகே முன்விரோதத்தில் வாலிபர், கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பனந்தாள்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த முட்டக்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் கண்ணையன் மகன் கார்த்திகேயன்(வயது 30). இவரது உறவினர் இடையாநல்லூர் பாஸ்கர் மகன் ராஜசேகர்(30). இருவருடைய குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன், அவரது நண்பர்கள் கார்த்திக்(22), ஆகாஷ்(19), ஹரிஷ்(19) மற்றும் சிலர், திருப்பனந்தாள் அருகே ராஜசேகர் வீட்டின் பின்புறம் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த ராஜசேகர் மற்றும் சிலர், கார்த்தி கேயனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திகேயனை குத்தினார். இதை தடுக்க வைத்த கார்த்திக், ஆகாஷ், ஹரீஷ் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது. பின்னர் ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த தகராறில் படுகாயம் அடைந்த கார்த்திகேயன் உள்பட 4 பேரையும் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக், ஆகாஷ், ஹரீஷ் ஆகிய 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலை மறைவான ராஜசேகரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story