தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராகும் கனவு என்றும் பலிக்காது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராகும் கனவு என்றும் பலிக்காது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 1 April 2019 11:00 PM GMT (Updated: 1 April 2019 6:50 PM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராகும் கனவு என்றும் பலிக்காது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தர்மபுரி, 

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகர்கூடல், நெக்குந்தி, சின்னபங்குநத்தம், சோம்பட்டி, பேடரஅள்ளி, பாலவாடி, பொம்மசமுத்திரம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது.

இந்த பிரசார கூட்டங்களில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசினார்.

இந்த பிரசார கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். வலிமையான இந்தியா உருவாக பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். தமிழகத்தில் மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று பேசி வருகிறார்கள். ஆனால் தி.மு.க. தலைவரோ எங்களது கூட்டணி கட்சி தலைவர்களை தரம் தாழ்த்தி பேசி வருகிறார். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள்.

தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஒருநாளாவது இருக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் துடிக்கிறார். அவருடைய கனவு பலிக்காது. என்றைக்குமே தமிழகத்தின் முதல்-அமைச்சராக அவர் வர முடியாது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மெகா கூட்டணி வேட்பாளர்களுக்கு தொடர்ந்து நல்லாதரவு பெருகி வருகிறது. இதை பொறுத்து கொள்ள முடியாத எதிர் கட்சி தலைவர்கள் எங்கள் கூட்டணியை பற்றி அவதூறு பேசி வருகிறார்கள். எது எப்படி இருந்தாலும் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

முன்னதாக தர்மபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவ-மாணவிகளிடையே டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடினார். தொடர்ந்து நடைபெறும் வேலை வாய்ப்பிற்கான தேர்வுகளில் வெற்றி பெற மாணவ, மாணவிகளுக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்அ.தி.மு.க. விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story