செங்கம் அருகே தலையில் கல்லை போட்டு பெண் படுகொலை யார் அவர்? போலீஸ் விசாரணை


செங்கம் அருகே தலையில் கல்லை போட்டு பெண் படுகொலை யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 4 April 2019 10:45 PM GMT (Updated: 4 April 2019 3:53 PM GMT)

செங்கம் அருகே தலையில் கல்லை போட்டு பெண் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கம், 

செங்கம்-போளூர் சாலையில் புதூர் மாரியம்மன் கோவில் உள்ளது. அதன் அருகே உள்ள புளியந்தோப்பு என்ற இடத்தில் தலையில் கல்லை போட்டு ஒரு பெண் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக புதுப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது பிணத்தின் முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைந்து காணப்பட்டது. 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் கையில் ‘சூர்யா’ என பச்சை குத்தப்பட்டு இருந்தது.

மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். போலீஸ் துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது, அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், அவரை யாராவது கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்தார்களா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story