கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்: தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்ட பிளஸ்-1 மாணவி தற்கொலை சின்னசேலம் அருகே பரிதாபம்


கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்: தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்ட பிளஸ்-1 மாணவி தற்கொலை சின்னசேலம் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 6 April 2019 11:15 PM GMT (Updated: 6 April 2019 4:33 PM GMT)

வீட்டில் கள்ளக்காதலனுடன் தாய் உல்லாசமாக இருந்தார். இதை பார்த்து தட்டிக்கேட்டதால் தாக்கப்பட்ட பிளஸ்-1 மாணவி மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி கவிதா தேவி(வயது 41). இவர்களுக்கு வைதேகி(19), பாக்கியலட்சுமி(16), மகாலட்சுமி(10) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இதில் வைதேகி பிளஸ்-2 படித்துள்ளார். பாக்கியலட்சுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து, பொதுத்தேர்வு எழுதி உள்ளார். மகாலட்சுமி அந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

வெங்கடேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து கவிதா தேவி, 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். கவிதா தேவிக்கும், அதே பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர் ராஜேந்திரன் என்கிற ரமணா(33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது கவிதா தேவி, தனது கள்ளக்காதலனான ரமணாவை வீட்டுக்கு அழைத்தார். அதன்படி ரமணாவும், உடனடியாக அவரது வீட்டிற்கு வந்தார். அங்கு இருவரும் உல்லாசம் அனுபவித்தனர்.

இதற்கிடையே வெளியே சென்றிருந்த பாக்கியலட்சுமி, வீட்டிற்கு வந்தார். அங்கு தனது தாய், அவரது கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ரமணா அங்கிருந்து சென்றதும், பாக்கியலட்சுமி தனது தாயை தட்டிக்கேட்டார்.

இதுகுறித்து கவிதாதேவி, ரமணாவிடம் தெரிவித்தார். உடனே அவர் கவிதாதேவியின் வீட்டுக்கு வந்து பாக்கியலட்சுமியை தாக்கியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த பாக்கியலட்சுமி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாக்கியலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாக்கியலட்சுமியின் தாத்தா முத்துசாமி(70), கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், தனது பேத்தி பாக்கியலட்சுமியை கவிதாதேவி திட்டியதாலும், ரமணா தாக்கியதாலும் தான் தற்கொலை செய்து கொண்டார். அதனால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து, கவிதாதேவி, ரமணா ஆகியோரை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story