அயனாவரத்தில் 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் அட்டூழியம்


அயனாவரத்தில் 2 பெண்களிடம் தங்க சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் அட்டூழியம்
x
தினத்தந்தி 8 April 2019 9:30 PM GMT (Updated: 8 April 2019 8:37 PM GMT)

சென்னை அயனாவரத்தில், 2 பெண்களிடம் தங்கசங்கிலியை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

சென்னை,

சென்னை அயனாவரம் திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். ரெயில்வே ஊழியர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 45). இவர், நேற்றுமுன்தினம் இரவு, அயனாவரம்-கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பிரம்மகுமாரிகள் இயக்க அலுவலகத்தில் நடந்த பூஜையில் கலந்து கொண்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.

வள்ளலார் தெருவில் உள்ள கங்கை அம்மன் கோவில் அருகே வரும்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள், அவரை வழிமறித்து தாக்கினார்கள். பின்னர் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துவிட்டு, மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர். கொள்ளையர்கள் தாக்கியதில் காயம் அடைந்த விஜயலட்சுமி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

இதேபோல அயனாவரம் முத்தம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருணா (41) என்ற பெண், நேற்று முன்தினம் இரவு அயனாவரம் ஈஸ்வரன் கோவில் தெருவில் நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயலட்சுமியிடம் தங்கசங்கிலி பறித்த அதே கொள்ளையர்கள்தான், அருணாவிடமும் தங்க சங்கிலியை பறித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தபகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Next Story