ராகுல்காந்தியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேச்சு


ராகுல்காந்தியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேச்சு
x
தினத்தந்தி 9 April 2019 11:15 PM GMT (Updated: 9 April 2019 7:05 PM GMT)

மத்தியில் ராகுல்காந்தியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது தொல்.திருமாவளவன் பேசினார்.

அரியலூர்,

சிதம்பரம் (தனி) தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய பகுதியில் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் தூத்தூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழுவூர் உள்ளிட்ட பல கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவர், மத்தியில் ராகுல் காந்தியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும். இந்த கூட்டணிக்கு வாக்களித்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும், என்றார்.

தொடர்ந்து கோவிலூர் கிராமத்தில் திருமாவளவன் வாக்கு சேகரித்து பேசுகையில், “தலைவர் கலைஞர் இல்லாத இந்த நேரத்தில் ஒரு சூளுரையை மேற்கொண்டிருக்கிறோம். அது நரேந்திரமோடியை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்க வேண்டும் என்பதுதான்” என ராகுல்காந்திக்கு பதிலாக நரேந்திரமோடி என்று தலைவர் பெயரை தவறாக உச்சரித்து விட்டார். பின்னர் அடுத்த சில நிமிடங்களில் தொடர்ந்து பேசும்போது ராகுல்காந்தி ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று அவர் பேசினார்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பிரசாரத்தின் போது தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர், துணை செயலாளர் தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story