ஊத்தங்கரை, ஓசூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி


ஊத்தங்கரை, ஓசூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி
x
தினத்தந்தி 14 April 2019 10:45 PM GMT (Updated: 14 April 2019 8:08 PM GMT)

ஊத்தங்கரை, ஓசூரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

ஊத்தங்கரை, 

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்று தெரிந்துகொள்ள புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள வி.வி.பேட் எனப்படும் எந்திரமும் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் முகவர்களின் முன்னிலையில் எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டு சரிபார்க்கப்பட்டது.

இது குறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெய்சங்கர் கூறுகையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி முடிந்தவுடன் அந்தந்த அறைகளில் சீல் வைக்கப்பட்டு தக்க பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய நாளான 17-ந்தேதி அந்தந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறினார்.

ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முல்லை நகரில் உள்ள வேளாண்மை விற்பனை மைய வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்காளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடந்தது. அதை ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பொது பார்வையாளர் கல்யாண் சந்த் ஷமன், ஓசூர் இடைத்தேர்தலை நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான விமல்ராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Next Story