பா.ஜனதா அரசு அமைந்தால் காவிரி–வைகை– குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் - எச்.ராஜா பிரசாரம்


பா.ஜனதா அரசு அமைந்தால் காவிரி–வைகை– குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் - எச்.ராஜா பிரசாரம்
x
தினத்தந்தி 14 April 2019 11:00 PM GMT (Updated: 14 April 2019 8:16 PM GMT)

பா.ஜனதா அரசு அமைந்தால் காவிரி– வைகை– குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் என்று எச்.ராஜா கூறினார்

சிவகங்கை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா சிவகங்கை நகரில் வீதிவீதியாக திறந்த வேனில் சென்று வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–நடைபெறவுள்ள தேர்தலில் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக ஊழல் அற்ற நல்ல ஆட்சி மத்தியில் நடைபெற்ற கொண்டு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாது ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மோடி அரசால் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்த தொகுதியில் இருந்து கடந்த 30 வருடமாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட மத்திய உள்துறை மற்றும் நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் இந்த தொகுதியில் எந்த பணியும் செய்யவில்லை. ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளை கூட கேட்கவில்லை. தற்போது இந்த தொகுதியில் அவர் மகனை நிறுத்த செய்து விரலை பிடித்து கூட்டி வந்து கொண்டு இருக்கிறார். சிதம்பரத்தின் குடும்பமே இதுவரை 18 தடவை கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கியுள்ளனர். இந்தநிலையில் தங்களை வளப்படுத்தி கொள்ள மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் முயற்சி செய்கிறார், இதை நாம் முறியடிக்க வேண்டும்.

மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக வேளாண் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அன்றாட பயன்பாடான குடிநீருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்கவும், வேளாண் பணியை மேம்படுத்தும் வகையிலும் ரூ.7 ஆயிரம் கோடியில் காவிரி–வைகை–குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். மாவட்டத்தில் செயல்பட்ட 11 நூற்பாலைகள் தற்போது செயல்பாட்டில் இல்லை. இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் தற்போது முடங்கிப் போயுள்ளன.

தொழில் வளர்ச்சி இல்லாமல் எண்ணற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி பரிதவித்து வருகின்றனர். எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 12 ஊராட்சி ஒன்றியங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story