மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் வள்ளியூரில் சரத்குமார் பிரசாரம்


மத்தியில் வலிமையான ஆட்சி அமைய மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் வள்ளியூரில் சரத்குமார் பிரசாரம்
x
தினத்தந்தி 14 April 2019 10:30 PM GMT (Updated: 14 April 2019 9:44 PM GMT)

மத்தியில் வலிமையான ஆட்சி அமைய பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும் என்று வள்ளியூரில் சரத்குமார் பேசினார்.

வள்ளியூர், 

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மனோஜ் பாண்டியன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வள்ளியூரில் நேற்று முன்தினம் இரவு சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தல் எப்போது வந்தாலும் அது முக்கியமானதாக கருதப்படுகிறது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்கின்ற ஒரு தலைவர் வேண்டும். அதற்கு மோடி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். மத்தியில் வலிமையான, பெரும்பான்மையான ஆட்சி அமைய, பிரதமராக மோடி மீண்டும் வர வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் இணைந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் மத்தியில் வலுவான, பெரும்பான்மையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று சொன்ன அடிப்படையில் மக்களுக்காக முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் அதிகமான ஊழல் நடந்திருக்கிறது.

தமிழகத்திற்கு பொருளாதார அடிப்படையிலும், வாழ்வாதார உயர்வுக்காகவும் அதிக திட்டங்களை தீட்டுகின்ற திட்டங்களுக்கு நிதியுதவி வேண்டும் என்றால், அந்த நிதியுதவியை மத்தியில் இருந்து பெறுவதற்கு நமக்கு சிறந்ததொரு ஆட்சி வேண்டும். அதற்காக மத்தியில் நிலையான பெரும்பான்மையான ஆட்சி இருந்தால்தான் சாதிக்கமுடியும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட கூட்டணியான மக்கள் நலன் காக் கின்ற கூட்டணிதான் இந்த மெகா கூட்டணி ஆகும்.

ஆனால் தி.மு.க. தலைவர் நம்ம கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறி வருகிறார். சந்தர்ப்பவாதம் என்றால் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்வார்கள் என்று அர்த்தம். இங்கு என்ன சந்தர்ப்பம் இருக்கிறது. மத்தியில் நிலையான ஆட்சி வரவேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. எனவே நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் மனோஜ் பாண்டியனை அமோக வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் பிரபாகரன், முத்துகருப்பன், வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம், நகர செயலாளர் பொன்னரசு, சமத்துவ மக்கள் கட்சி மாநில அரசியல் ஆலோசகர் லாரன்ஸ், நெல்லை மாவட்ட செயலாளர் ராஜகுமார் உள்பட பலர் இருந்தனர்.

Next Story