பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வெப் கேமரா கண்காணிப்பு பணியாளர்களுக்கு பயிற்சி


பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வெப் கேமரா கண்காணிப்பு பணியாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 April 2019 9:30 PM GMT (Updated: 14 April 2019 10:28 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள வெப் கேமரா கண்காணிப்பு பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

நெல்லை, 

நாடாளுமன்ற தேர்தலுக்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள 1307 பதற்றமான மற்றும் பதற்றமாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் மாணவர்கள், பணியாளர்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பயிற்சி வகுப்பு நடந்தது. இதை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என 511 வாக்குச்சாவடிகளும், 796 பதற்றமாக கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1307 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வெப் கேமரா கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுபவர்கள் முதலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபடும்் மாணவர்கள் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகளின் அருகில் தங்களது வாக்கு செலுத்தும் பகுதி இருந்தால் மட்டும் சென்று வாக்களிக்க வேண்டும். அல்லது தங்களது வாக்கினை செலுத்த படிவம் 12-ஐ பூர்த்தி செய்து, பணிபுரியும் வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்த வேண்டும்.

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் கவனமுடன் எந்த பாரபட்சமின்றி நடுநிலையாக செயல்பட வேண்டும். வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் மாலையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். தேர்தல்் நாளன்று வெப் கேமராவின் மூலம் மாவட்டத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாநில தேர்தல் ஆணையர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையர் என தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் பார்வையிடுவர்கள். எனவே எவ்வித குறைபாடு அல்லது உபகரணங்கள் குறைபாடுமின்றி தங்கு தடையில்லாமல் பணிகள் மேற்கொள்ளவேண்டும்.

இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி வாக்குச்சாவடிகளில் பொருத்திய வெப் கேமராக்கள் வாக்குப்பதிவு தொடங்கியது முதல் கடைசி நபர் வாக்களித்து சென்று வாக்குப்பதிவு எந்திரம் முத்திரையிடப்பட்டு மூடிந்த பிறகு தான் இணையதள இணைப்பினை துண்டிக்க வேண்டும். பதிவு செய்த மெமரி கார்டினை வாக்கச்சாவடி அலுவலரிடம் ஒப்படைத்த பின்னர் வாக்குச்சாவடியை விட்டு வெளியே செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story