மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை தோற்கடிக்க வேண்டும் அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி பிரசாரம்


மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை தோற்கடிக்க வேண்டும் அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி பிரசாரம்
x
தினத்தந்தி 15 April 2019 11:00 PM GMT (Updated: 15 April 2019 3:48 PM GMT)

மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை தோற்கடிக்க வேண்டும் என அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி பிரசாரம் செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர் ரெங்கசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு பரிசு பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். தஞ்சை நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க அலுவலகத்திற்கு நேற்று சென்ற வேட்பாளர் ரெங்கசாமி, அங்கு வக்கீல்களை சந்தித்து தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கேட்டு துண்டுபிரசுரங்களை வினியோகித்தார். தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் இருந்த வக்கீல்களையும் சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டார்.

இதையடுத்து தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று ரெங்கசாமி பிரசாரம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:–

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை கட்டுக்கோப்பாக வழிநடத்தக்கூடிய தகுதி சசிகலாவுக்கு தான் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் முன்மொழிந்தனர். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை. ஆனால் மடியில் கனம் இருப்பதால், சிலரின் அச்சுறுத்தல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில அமைச்சர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றினார்கள்.


ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கக்கூடாது. சட்டசபையில் உருவப்படம் வைக்கக்கூடாது என கூறி நீதிமன்றத்திற்கு சென்றவர்களை தேடிச்சென்று எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதா யாரையெல்லாம் வேண்டாம் என்று சொன்னாரோ அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கே துரோகம் செய்யும் அளவுக்கு கூட்டணி வைத்துள்ளனர்.

இந்த துரோகத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் சரியான பாடத்தை துரோக கூட்டணிக்கு புகட்டுவார்கள். ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது இந்த தேர்தலோடு தெரிந்து விடும். தஞ்சை மக்கள் வெற்றி சின்னமான பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும்.


மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளையும், இரட்டை வேட தி.மு.க.வையும் தோற்கடிக்க வேண்டும். நான் வெற்றி பெற்றவுடன் பெரியகோவிலில் மீதமுள்ள 4 தேர்களும் ஓட நடவடிக்கை எடுப்பேன். மாநகராட்சி குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவேன். குடிசைகள் இல்லாத தொகுதியாக மாற்றி அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம் உள்ளிட்ட விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கப்படும்.


நான் எம்.எல்.ஏ.வாக இருந்த 6 ஆண்டுகளில் முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை சந்தித்து மக்களின் கோரிக்கைகளை எடுத்துக்கூறி தஞ்சை தொகுதியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளேன். தஞ்சை நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தஞ்சை பெரிய கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது. புதிய கலெக்டர் அலுவலகம், புதிய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.150 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.


குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலைகள் எல்லாம் தரமான சாலைகளாக போடப்பட்டது. ரூ.42 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 7 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு பழுதான குடிநீர் குழாய்கள் எல்லாம் மாற்றப்பட்டன. கழிவறை வசதி, வடிகால் வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. நான் 6 ஆண்டுகளில் தஞ்சை தொகுதிக்கு செய்த வளர்ச்சி பணிகள் எல்லாம் முதல்–அமைச்சராக ஜெயலலிதா இருந்த காலத்தில்தான் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி முதல்–அமைச்சராக பொறுப்பு ஏற்ற பிறகு தஞ்சை தொகுதிக்கு எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இந்த தொகுதி மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் வளர்ச்சி பணிகள் தொடர முதல்–அமைச்சராக டி.டி.வி.தினகரன் பொறுப்பு ஏற்பதற்கு அச்சாரமாக தஞ்சை தொகுதியில் அ.ம.மு.க. வெற்றி பெற பரிசு பெட்டி சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story