கடலூர் தாலுகா அலுவலகத்தில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்


கடலூர் தாலுகா அலுவலகத்தில், வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்
x
தினத்தந்தி 15 April 2019 10:30 PM GMT (Updated: 15 April 2019 7:52 PM GMT)

கடலூர் தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடலூர்,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திட்டக்குடி(தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 1,499 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான 104 வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரம் ஆகியவை ஏற்கனவே அந்தந்த தாலுகா அலுவலகங்களில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வாக்குச்சாவடிக்கு தேவையான அழியாத மை, வாக்காளர் பட்டியல், வாக்காளர் சீட்டு மற்றும் பென்சில், ரப்பர், பேனா, மெழுகு உள்ளிட்ட பொருட்களை வாக்குச்சாவடிகள் வாரியாக பிரித்து வைக்கும் பணி கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தேவையான தளவாட பொருட்களையும் தனித்தனியாக பிரித்து சாக்குப்பைகளில் போட்டு கட்டி தயார் நிலையில் வைத்துள்ளோம். இவற்றை தேர்தலுக்கு முந்தையநாளான நாளை(புதன்கிழமை) மதியம் தாலுகா அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு எடுத்து செல்லப்படும்போது உடன் இந்த பொருட்கள் அடங்கிய சாக்குப்பையும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story