விளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடோனில் சோதனை: பருத்தி விதை மூட்டைக்குள் பதுக்கிய ரூ.6.60 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி


விளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. பிரமுகர் குடோனில் சோதனை: பருத்தி விதை மூட்டைக்குள் பதுக்கிய ரூ.6.60 லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
x
தினத்தந்தி 15 April 2019 10:00 PM GMT (Updated: 15 April 2019 8:22 PM GMT)

விளாத்திகுளம் அருகே அ.தி.மு.க. பிரமுகரின் குடோனில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், பருத்தி விதை மூட்டைக்குள் பதுக்கிய ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

விளாத்திகுளம், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே மேல நம்பியாபுரத்தில் உள்ள குடோனில் சாக்கு மூட்டையில் பணம் பதுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவில்பட்டி வேளாண்மை அலுவலரும், கூடுதல் பறக்கும் படை அலுவலருமான ரீனா தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் மேல நம்பியாபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் தனபதி என்பவருக்கு சொந்தமான குடோனில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஒரு சாக்கு மூட்டையில் பருத்தி விதைகள் இருந்தன. அதனை தரையில் கொட்டி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது பருத்தி விதைகளுக்கு அடியில் பணம் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது. அந்த பணத்துடன் இருந்த ஒரு வெள்ளை தாளில் முத்துலாபுரம் என்று எழுதப்பட்டு இருந்தது. அந்த பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை.

இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் நிஷாந்தினியிடம் ஒப்படைத்தனர். முத்துலாபுரம் பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக அ.தி.மு.க. பிரமுகரின் குடோனில் பணம் பதுக்கப்பட்டதா? என்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 13-ந்தேதி விளாத்திகுளம் அருகே சின்னமரெட்டிபட்டியில் பஸ்சில் சென்ற அ.தி.மு.க. நிர்வாகியின் உறவினரிடம் ரூ.31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் விளாத்திகுளம் அருகே மேல நம்பியாபுரத்தில் அ.தி.மு.க. பிரமுகரின் குடோனில் பருத்தி விதை மூட்டைக்குள் பதுக்கிய ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story