பொதுமக்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


பொதுமக்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 16 April 2019 10:45 PM GMT (Updated: 16 April 2019 9:46 PM GMT)

பொதுமக்களின் ஆதரவுடன் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

பேரூர்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மகேந்திரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பேரூர் அருகே மாதம்பட்டி பிரிவு- சிறுவாணி ரோடு பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் குடிநீர் திட்டம், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங் கப்பட்ட நிதி, பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர், கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டதை விட, 3 மடங்கு அதிகமாகும்.

ஆனால் தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யவில்லை. இதை எல்லாம் மறைத்துவிட்டு, அ.தி.மு.க. ஆட்சி மீதும், உள்ளாட்சி துறையில் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், பொய்யான புகார்களை கூறுகிறார். என் மீது கூறப்பட்ட இந்த அவதூறான ஊழல் புகார்களை நிரூபித்தால் நான் பதவியை விட்டு விலக தயார். அதேபோல் புகார்களை நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் பதவியில் இருந்து விலக தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டு இருந்தேன்.

ஆனால் இதுவரைக்கும் அவர் பதில் கூறாமல் தொடர்ந்து தவறான, பொய்யான ஊழல் புகார்களை கூறி வருகிறார். மேலும் பிரிந்திருந்த அ.தி.மு.க. கட்சியை மெகா கூட்டணியாக ஒன்று சேர்த்தற்கு நான் முக்கிய காரணம் என்பதால், அதை அவரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம், அதன் பின்னர் தொகுதி பக்கமே வரவில்லை. நாங்கள் செய்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். எனவே பொதுமக்களின் ஆதரவுடன் 40 தொகுதியிலும், அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் என்.கே.செல்வதுரை, பொருளாளர் என்.எஸ்.கருப்புசாமி, ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜி.கே.விஜயகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் டி.ஏ.சந்திரசேகர், பா.ஜனதா தலைமை செயற்குழு உறுப்பினர் மாதம்பட்டி கே.தங்கவேல், தே.மு.தி.க. வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன், பொருளாளர் கோவை சம்பத், ஒன்றிய செயலாளர் மாதம்பட்டி பாலு, முன்னாள் கவுன்சிலர் மாதம்பட்டி மோகன், சி.டி.சி. முருகன், த.மா.கா. வட்டார தலைவர் ரங்கசாமி, வட்டார பிரதிநிதி கிருஷ்ணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story